Social Icons

Monday 3 December 2012

பெண்களின் தற்காப்பு எது?

இன்றைய காலத்தில் பெண்கள் தற்காப்புக் கலை என்ற பெயரில் கற்று வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கு முதல் முக்கிய தற்காப்பு எது தெரியுமா? அது தான் ஹிஜாப்.
பர்தா என்பதன் அரபிச் சொல் தான் ஹிஜாப். பெண்கள் தங்களின் அங்கங்களை மறைத்துக் கொள்ளும் வகையான ஆடையைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
இஸ்லாம் பெண்களை உயர்வாகவும், கண்ணியமானவர்களாகவும் மதிக்கிறது. ஒரு பொருள் பேணிப் பாதுகாப்படும் பொழுது தான் அதன் மதிப்பு உயரும். அது சிறப்புடனும் பேசப்படும். இவ்வாறு தான் பெண்களை உயர்வாகக் கருதி ஹிஜாப் முறையைக் கையாளச் சொல்கிறது இஸ்லாம். இதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 33:59)
தெருக்கள், கடை வீதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, வங்கி போன்ற அனைத்து இடங்களிலும் ஆண்களுடன் பெண்கள் கலந்து இருப்பார்கள். பெண்களை கெட்ட எண்ணத்துடன் பார்க்கும் ஆண்கள் இருக்கும் இப்படிப்பட்ட இடங்களில் பெண்கள் ஒழுக்கத்துடன் பயமின்றி சென்று வர ஹிஜாப் அவசியமாகின்றது. ஹிஜாப் அணிந்த பெண் கெட்ட எண்ணம் கொண்ட ஆண்களின் பார்வைகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறாள். இப்படி ஹிஜாபின் சிறப்பை அறிந்தவர்கள் இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்ல. (எங்கள் ஊர் தொண்டியில்) மாற்று மதத்தைச் சேர்ந்த, பருவடைந்த மாணவிகள் ஹிஜாபுடன் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஹிஜாப் அணிந்து வெளியில் செல்பவர்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு, மேக்கப், லிப்ஸ்டிக் போட்டு, சென்ட் போன்ற நறுமணப் பொருட்களை உபயோகித்து ஹிஜாபுடன் சென்றால் ஹிஜாபின் நோக்கமே பாழாகிவிடும். ஹிஜாப் அணிபவர்கள் முகத்தையும், இரு முன் கைகளையும் தவிர வேறெந்த அலங்காரத்தையும் வெளிக்காட்டாக் கூடாது.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்
(அல்குர்ஆன் 24:31)
மேலும் ஒழுக்கமுடன் வாழும் பெண்களுக்கு மறுமையில் அல்லாஹ் மகத்தான கூலியை வைத்திருப்பதாகக் கூறுகின்றான்.
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:35)
இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். அவற்றில் மிகச் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: முஸ்லிம் (2911)
இவ்வாறு குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் நடக்கும் நல்லொழுக்கமுள்ள பெண்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக! 

                                                                                                                       - raj mohamed

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்