Social Icons

Monday 3 December 2012

ஆண்களின் ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது என்றால் பேண்ட் சட்டைகளின் நிலை என்ன ?

ஆண்களின் ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை. இன்று பெண்களுக்கென்றே தனியாக பேண்ட், சட்டைகள் இருக்கின்றன. இவற்றின் நிலை என்ன? இதை ஆண்களின் ஆடை என்று கணிப்பதா? பெண்களின் ஆடை என்று கூறுவதா?
பெண் அணிவதைப் போன்று ஆடை அணிகின்ற ஆணையும், ஆண் அணிவதைப் போன்று ஆடை அணிகின்ற பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 3575
ஆண்களின் ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது; பெண்களின் ஆடையை ஆண்கள் அணியக் கூடாது என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ் இது தான்.
பொதுவாக இது பெண்கள் ஆடை, இது ஆண்கள் ஆடை என்று குறிப்பிட்டுப் பிரிக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் இது வித்தியாசப்படும். உதாரணமாக நமது நாட்டில் பாவாடை என்ற உடையை பெண்கள் அணிகிறார்கள். ஆனால் ஃபிஜி என்ற நாட்டில் அதையே ஆண்கள் அணிகிறார்கள்.
ஒரு பகுதியிலேயே ஒரே விதமான ஆடையை இரு சாராரும் அணிகிறார்கள். தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்களில் சிலர் கைலி போன்ற ஆடையை அணிவது வழக்கம். ஆண்களும் கைலி அணிகின்றனர். இது போன்று இரு சாராருக்கும் பொதுவான ஆடைகளும் உள்ளன.
எனவே குறிப்பிட்டு இந்த உடையை ஆண்கள் அணியக் கூடாது; இந்த உடையைப் பெண்கள் அணியக் கூடாது என்று இந்த ஹதீசுக்குப் பொருள் கொள்ள முடியாது. அவ்வாறு பொருள் கொண்டால் அது அர்த்தமற்ற ஒன்றாகி விடும். எனவே இந்த ஹதீஸ் அந்தக் கருத்தைத் தரவில்லை.
பெண்கள் அணியும் விதத்தில் ஆண்கள் ஆடை அணியக் கூடாது; ஆண்கள் அணியும் விதத்தில் பெண்கள் அணியக் கூடாது என்று தான் இந்த ஹதீசுக்குப் பொருள் கொள்ள வேண்டும்.
சேலை, தாவணி போன்ற ஆடைகளை எடுத்துக் கொள்வோம். அதைப் பெண்கள் அணியும் விதத்தில் ஆண்கள் அணிவதற்குத் தடை உள்ளது. ஆனால் அதையே லுங்கி போன்று ஒரு ஆண் கட்டினால் அதைத் தடுக்க முடியாது.
ஆடையின் மூலம் ஆண்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்வதையும், பெண்கள் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்வதையும் தான் இந்த ஹதீஸ் தடை செய்கின்றதே தவிர குறிப்பிட்ட ஆடையை அணிவதைத் தடை செய்யவில்லை. கீழ்க்கண்ட ஹதீஸ் இந்தக் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5885                                     -ராஜ் முஹம்மது

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்