Social Icons

Wednesday 28 November 2012

கர்பிணிப் பெண்கள் நோன்பை விட்டால் என்ன செய்வது?

பொதுவாக நோன்பை விட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நோன்பை மற்ற நேரத்தில் கலா செய்ய வேண்டும் என்பதுதான் மார்க்கத்தின் தெளிவான நிலைபாடாகும்.
அந்த அடிப்படையில் கற்பினிப் பெண்கள் நோன்பை விட்டால் அவர்கள் அதனை மீண்டும் மீட்டி கலா செய்து கொள்ள வேண்டும்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது) (அல்குர்ஆன் 2:186)
மேற்கண்ட வசனத்தில் ரமலானை அடைவோர் மீது நோன்பு கடமை என்று அல்லாஹ் கூறுகிறான்.

சிலர் கற்பினிப் பெண்களுக்கு நோன்பு கடமையில்லை என்று வாதிடுகிறார்கள்.

நோன்பு கடமை என்ற பொதுவான சட்டத்திலிருந்து யாருக்காவது விதிவிலக்கு இருக்கின்றது என்று ஒருவர் கூறினால் குர்ஆன், ஹதீஸிலிருந்து அதற்குத் தெளிவான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும். அதாவது ஒருவருக்கு நோன்பு கடமையில்லை என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ தெளிவாகக் கூறியிருக்க வேண்டும்.

நோயாளிகள், பயணிகள் ஆகியோருக்கு இந்த வசனத்தில் அல்லாஹ் சலுகையளித்துள்ளான். அந்தச் சலுகை என்பது, இப்போதே நிறைவேற்றாமல் வேறு நாட்களில் நிறைவேற்றலாம் என்பது தான். இந்த வசனமே இதை விளக்கி விடுகின்றது எனவே அல்லாஹ் சலுகை அளித்துள்ளான் என்பதற்கு அவர்கள் அறவே நோன்பு நோற்கத் தேவை இல்லை என்று பொருள் கொள்வது ஏற்கத்தக்கது அல்ல.

இது தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலருக்கு நோன்பில் சலுகை அளித்தார்கள் என்றால் அந்தச் சலுகையும் வேறு நாட்களில் அதை நிறைவேற்றலாம் என்ற சலுகை என்றே விளங்க வேண்டும்.

கர்பினிகளுக்கு நோன்பு கடமையில்லை என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியிருப்பார்கள்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நோன்பு கடமையா? இல்லையா? என்பது தான். கர்ப்பிணிப் பெண்களுக்கு நோன்பு கடமையே இல்லை என்றால் கண்டிப்பாக அது மார்க்கத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கும்.

கர்பினிகள் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.
'பயணிகள் பாதியாகத் தொழுவதற்கு அல்லாஹ் சலுகையளித்துள்ளான். பயணிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் சலுகையளித்துள்ளான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 2056, இப்னுமாஜா 1657
கர்பினிகளுக்கு நோன்பில் வழங்கப்பட்டுள்ள சலுகையானது பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் போன்றது தான் என்று இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

பயணிகளுக்கு நோன்பே கடமையில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனெனில் பயணிகளும், நோயாளிகளும் நோன்பை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

கர்பிணிகளையும் பயணிகளுடன் இணைத்து இந்த ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் அவர்களும் நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்