Social Icons

Saturday 20 October 2012

நிய்யத்தை வாயால் மொழியக் கூடாது என்று சொல்கிறார்கள், ஹஜ் உம்ராவில் இஹ்ராமின் போது மட்டும் நிய்யத்தை வாயால் மொழிய வேண்டும் என்று சொல்கிறார்களே! நிய்யத்தை வாயால் மொழியக் கூடாது என்பதற்கு இது முரணாக உள்ளதே? விளக்கவும்

    'செயல்கள் யாவும் எண்ணத்தைப் பொருத்ததே! அவரவருக்கு எண்ணியது தான் கிடைக்கும்' இது நபிமொழி. அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்கள் : புஹாரி - 1, முஸ்லிம் - 4692, திர்மித் -1698)
    எந்தச் செயலுக்கும் நிய்யத்தை மொழிவது அவசியமில்லை தான். எவரும் தான் நினைப்பதை தனக்குத் தானே சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.
    உதாரணமாக ஒருவர் மதுரையிலிருந்து திருச்சிக்கு நாளை செல்ல நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக அவர் நான் நாளை மதுரையிலிருந்து திருச்சிக்கு செல்ல நினைக்கிறேன் என்று தனக்குத் தானே வாயால் சொல்லிக் கொண்டிருப்பதில்லை.

    அது போலவே தொழுகை நோன்பு ஜக்காத் இது போன்று இன்னபிற வணக்கங்களுக்கும் நிய்யத்தை வாயால் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நபி (ஸல்) அவர்களும் நிய்யத்தை வாயால் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லித்தரவும் இல்லை.
    ஆனால் ஹஜ் உம்ராவுக்கு மட்டும் நிய்யத்தை வாயால் மொழிய வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நிய்யத் என்றால் மனதால் நினைப்பது தானே! ஏன் இங்கே வாயால் மொழிய வேண்டும்? இதற்கு விடை சொல்லியாக வேண்டும்.
    உண்மையென்னவென்றால் ஹஜ் உம்ராவின் போது கூட நாம் நிய்யத்தை மனதால் தான் நினைக்க வேண்டும். வாயால் சொல்லக் கூடாது தான். இதற்குறிய ஆதாரம் என்ன என்பதையும் நாம் காட்ட வேண்டும் இல்லையா?
    தொழுகையில் நிய்யத்தை சொல்கிறேன் என்ற பெயரில் 'நவைத்து அன்உ ஸல்லிய லில்லாஹி..' என்று ஆரம்பிப்பதை ஓதுவார்கள். அதாவது 'இந்தத் தொழுகையை அல்லாஹ்வுக்காக தொழுவதற்கு நிய்யத்து வைக்கிறேன்..' என்பது அதன் பொருள்.
    இது போலவே நோன்பு, 'நவைத்து சவ்ம அதின்.. ' நோன்பு வைக்க நிய்யத்துச் செய்கிறேன்.. என்று ஆரம்பிக்கிறது.
    ஆனால் ஹஜ் உம்ராவில் வாயால் சொல்லப்படும் நிய்யத்து இப்படி ஆரம்பிக்க வில்லை.
    ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாவது:
    'நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காக சென்றோம். அப்போது 'லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க பில்ஹஜ்' எனக் கூறினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்கா நகருக்கு வந்த போது) அதை உம்ராவாக ஆக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நாங்கள் அவ்வாறே ஆக்கினோம்'. (நூல் : புஹாரி - 1570)
    அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
    ..பைதா என்னுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் - உம்ராவுக்காக நபி (ஸல்) தல்பியா கூறினார்கள்... (நூல் : புஹாரி - 1714)
    'லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரத்தன்' என்ற வாசகம் நிய்யத்தை வாயால் மொழிவதற்குறிய வாசகம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறாகும்.
    இது தல்பியாவின் ஒரு பகுதி என்பதை அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ்; தெளிவாகவே கூறுகிறது.
    அதோடு நபி (ஸல்) அவர்கள் 'லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரத்தன்' என்று சொல்வதை நிய்யத் என்று நாம் அறிந்த வரை எந்த இடத்திலும் சொல்ல வில்லை.
    ஆக மனதால் நினைப்பது தான் நிய்யத், வாயால் சொல்லக் கூடாது என்பது தெள்ளத் தெளிவு.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்