Social Icons

Monday 1 October 2012

மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை



கண்களை மூடுதல்
ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட வேண்டும்.
அபூ ஸலமா மரணித்தவுடன் அவரருகே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தனர். அவரது கண்கள் நிலைகுத்திக் காணப்பட்டது. உடனே அதை மூடினார்கள். 'உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைத் தொடர்கிறதுஎன்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)  நூல்: முஸ்லிம் 1528

உடலுக்கு நறுமணம் பூசுதல்
இறந்தவரின் உடலிலிருந்து துர்நாற்றம் வந்தால் அதை மறைப்பதற்காக நறுமணம் பூச வேண்டும்.
இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் மரணித்த போது 'இவருக்கு நறுமணம் பூச வேண்டாம்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851)
பொதுவாக இறந்தவர் உடலுக்கு நறுமணம் பூசுவது நடைமுறையில் இருந்ததால் தான் இஹ்ராம் அணிந்தவருக்கு நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

உடலை முழுமையாக மூடி வைத்தல்
ஒருவர் இறந்தவுடன் அவரது உடலை போர்வை போன்றவற்றால் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது யமன் நாட்டில் தயாரான கோடு போடப்பட்ட போர்வையால் மூடப்பட்டனர்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 5814

பார்வையாளர்களுக்கு முகத்தைத் திறந்து காட்டலாம்
போர்வையால் மூடப்பட்டாலும் பார்க்க வரும் பார்வையாளர்கள் விரும்பினால் அவர்களுக்காக முகத்தைத் திறந்து காட்டலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது அபூ பக்ர் (ரலி) அவர்கள் (மதீனாவின் புறநகர் பகுதியான) ஸுன்ஹ் என்ற இடத்தில் தமது வீட்டில் இருந்தார்கள். கேள்விப்பட்டு குதிரையில் விரைந்து வந்தார்கள். குதிரையிலிருந்து இறங்கி யாரிடமும் பேசாமல் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். ஆயிஷா அவர்களின் அறைக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உடலை நாடிச் சென்றார்கள். கோடுகள் போடப்பட்ட யமன் நாட்டுப் போர்வையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்த்தப்பட்டிருந்தார்கள். உடனே அவர்களின் முகத்தை விலக்கிப் பார்த்தனர். அவர்கள் மீது விழுந்து முத்தமிட்டு பின்னர் அழலானார்கள். பின்னர் 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் உங்களுக்கு இரண்டு மரணத்தை ஏறப்படுத்தவில்லை. உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட மரணத்தை அடைந்து விட்டீர்கள்' என்று கூறினார்கள். வெளியே வந்த போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்து உட்காருங்கள் என்று அபூ பக்ர் (ரலி) கூறினார்கள். அவர் உட்கார மறுத்தார். மீண்டும் உட்காரச் சொன்னார்கள். அப்போதும் மறுத்தார். உடனே அபூ பக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். மக்களெல்லாம் உமரை விட்டு அபூ பக்ர் (ரலி) அருகில் திரண்டனர். 'உங்களில் யாராவது முஹம்மது (ஸல்) அவர்களை வணங்குபவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்) முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். உங்கள் யாராவது அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்) அவன் தான் சாகாமல் என்றென்றும் உயிருடன் இருப்பவன்என்று கூறிவிட்டு 'முஹம்மத் தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அபூ பக்ர் (ரலி) ஓதிக் காட்டும் வரை அப்படி ஒரு வசனம் இருப்பதை மக்கள் அறியாது இருந்தனர். அதைக் கேட்ட ஒவ்வொருவரும் அதை ஓதலனார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 1242, 3670, 4454
மூடப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தை அபூ பக்ர் (ரலி) அவர்கள் திறந்து பார்த்துள்ளனர்.
இறந்தவரின் உடலை மூடி வைப்பதற்கும்பார்வையாளர்களுக்கு முகத்தைத் திறந்து காட்டுவதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இதற்கு உள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.
என் தந்தை கொல்லப்பட்ட போது நான் அழுது கொண்டே என் தந்தையின் முகத்தைத் திறந்து பார்க்கலானேன். மக்கள் என்னைத் தடுத்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 1244
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஜாபிர் அவர்கள் தமது தந்தையின் முகத்தைத் திறந்து பார்த்திருக்கிறார். இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள்.

இறந்தவர் உடலில் முத்தமிடுதல்
இறந்தவர் உடலில் முத்தமிடலாம் என்றோமுத்தமிடக்கூடாது என்றோ நேரடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மார்க்க சம்பந்தமில்லாத விஷயங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  தடுத்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். தடுத்திருக்கா விட்டால் அது அனுமதிக்கப்பட்டது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மார்க்கம் தொடர்பான வணக்க வழிபாடுகளைப் பொறுத்த வரை தடுத்துள்ளார்களா என்று பார்க்கக் கூடாது. அனுமதித்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். அனுமதி இருந்தால் அதைச் செய்ய வேண்டும். அனுமதிக்கு ஆதாரம் இல்லாவிட்டால் அதைச் செய்யக் கூடாது.
இந்த அடிப்படையில் முத்தமிடுதல் என்பது வணக்கம் அல்ல. நமது அன்பை வெளிப்படுத்தும் செயலாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடுத்ததாக ஆதாரம் கிடைக்காவிட்டால் அனுமதி என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அபூ பக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் முகத்தில் முத்தமிட்டுள்ளனர் (புகாரி 1242, 3670, 4454, 5712, 4457) என்பது இதை வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
எனவே மரணித்தவர் மீது அன்பு வைத்துள்ளவர்கள் முத்தமிட்டால் அதைத் தடுக்கக் கூடாது. அன்னிய ஆண்கள் அன்னியப் பெண்களுக்கு முத்தமிட பொதுவான தடை உள்ளதால் அவர்கள் தவிர மற்றவர்கள் இறந்தவர்கள் உடலை முத்தமிட்டால் அது குற்றமாகாது.

உடலை கிப்லா திசை நோக்கி வைக்க வேண்டுமா?
இறந்தவர் உடலை கிப்லா திசை நோக்கித் திருப்பி வைக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமாக உள்ளன.
'பெரும் பாவங்கள் யாவை?' என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவை ஒன்பது என்று கூறிவிட்டு, 'முஸ்லிமான பெற்றோருக்கு நோவினை அளிப்பதுஉயிருள்ளவருக்கும் இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஃபாவின் புனிதத்தை மறுத்தல்என்பதை அதில் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: உமைர் (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 2490, பைஹகீ 3/408, 10/186,
தப்ரானீ 17/47, ஹாகிம் 1/127
மேற்கண்ட நான்கு நூல்களிலும் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் ஹமீத் பின் ஸினான் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்று தெரியாதவர். எனவே இது பலவீனமான செய்தியாகும்.
பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் (3/409) அய்யூப் பின் உத்பா என்பார் இடம் பெறுகிறார். இவர் நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் பலவீனமானவை.
இந்தக் கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் இல்லாததால் கிப்லாவை நோக்கி உடலைத் திருப்பி வைக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.
மேலும் மேற்கண்ட ஹதீஸின் கருத்திலும் குழப்பம் உள்ளது.
உயிருள்ளவருக்கும்இறந்தவர்களுக்கும் கிப்லா என்று கூறப்பட்டுள்ளது. உயிருள்ளவருக்கு கிப்லா என்றால் 24 மணி நேரமும் அதை நோக்கியே இருக்க வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். தொழும் போது கிப்லாவை நோக்க வேண்டும் என்றே புரிந்து கொள்வார்கள்.
அது போல் இறந்தவர்களுக்கு கிப்லா என்றால் இறந்தவர் தொழும் போது அதை நோக்க வேண்டும் என்ற கருத்து வரும். இறந்தவருக்கு தொழுகை இல்லை. தொழ முடியாது எனும் போது இறந்தவர்களுக்கு கிப்லா என்பதும் பொருளற்றதாகி விடுகிறது.
எனவே நமது வசதிக்கு ஏற்ப உடலை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் வைக்கலாம்.

அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல்
ஒருவர் இறந்து விட்டால் அவசரமாக உடனேயே அடக்கம் செய்து விடுவது தான் நல்லது என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது.
தல்ஹா பின் அல்பரா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அவரை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். 'இவருக்கு மரணம் வந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். இவர் மரணித்தவுடன் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். ஏனெனில் எந்த ஒரு முஸ்லிமின் உடலும் (வீட்டில்) வைத்திருக்கக் கூடாதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுஸைன் பின் வஹ்வஹ் நூல்: அபூ தாவூத் 2747
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் உர்வா பின் ஸயீத் என்பார் யாரென்று தெரியாதவர். எனவே இது பலவீனமாகும்.
மேலும் நோய் விசாரிக்கச் சென்றால் நல்லதையே கூற வேண்டும் என்று நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம்.
ஒரு நோயாளி வீட்டுக்குச் சென்று சீக்கிரம் இவர் போய் விடுவார். போனதும் சொல்லி அனுப்புங்கள் என்பன போன்ற அநாகரிகமான பேச்சை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவே மாட்டார்கள். எனவே இதன் கருத்தும் தவறாகவுள்ளது.
'உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை வீட்டில் வைத்துக் கொண்டிருக்காதீர்கள். அவரது உடலை உடனே கப்ருக்கு எடுத்துச் செல்லுங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: தப்ரானி 12/444
இதன் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் அப்துல்லாஹ் பாபலத்தி என்பவரும் அய்யூப்  பின் நஹீக் என்பவரும் இடம் பெறுகின்றனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள். எனவே இதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
'ஜனாஸாவை விரைந்து கொண்டு செல்லுங்கள்! அது நல்லதாக இருந்தால் நல்லதை நோக்கி விரைந்து கொண்டு சென்றவர்களாவீர்கள். கெட்டவரின் உடலாக அது இருந்தால் உங்கள் தோள்களிலிருந்து கெட்டதை (சீக்கிரம்) இறக்கி வைத்தவர்களாவீர்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 1315
இந்த ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
இந்த ஹதீஸ் சரியானது என்றாலும் இவர்கள் கூறுகின்ற கருத்தை இது தரவில்லை. உடலைத் தோளில் தூக்கி விட்டால் வேகமாக நடந்து செல்ல வேண்டும் என்பதைத் தான் இது கூறுகிறது. உங்கள் தோள்களிலிருந்துஎன்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம். வீட்டில் உடலை வைத்திருப்பதற்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
எனவே உடலை அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது என்பதற்கு ஆதாரம் இல்லை.
அதிகமான பேர் தொழுகையில் பங்கேற்பது இறந்தவருக்குப் பயன் தரும் என்ற ஹதீஸ்களை வேறு இடத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
அதிகமான மக்கள் சேருவதற்காகத் தாமதம் செய்யலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனே அடக்கம் செய்து விட வேண்டும் என்று கட்டளையிடாத காரணத்தால் தான் அவர்கள் மூன்றாம் நாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கக்  கூடும்.
ஆயினும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதால் மூன்று நாட்களுக்கு மேல் உடலை வைத்திருக்கக் கூடாது. ஒரு வீட்டில் உடல் இருக்கும் வரை சோகம் நீடிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இறந்தவரைக் குளிப்பாட்டுதல்
ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்வதற்கு முன் அவரது உடலைக் குளிப்பாட்டுவது அவசியம்.
இறந்தவுடன் கசப் மாற்றுவதுஎன்ற பெயரில் ஒரு தடவை குளிப்பாட்டுகின்றனர்.
பின்னர் அடக்கம் செய்தவற்கு முன் ஒரு தடவை குளிப்பாட்டுகின்றனர்.
சில ஊர்களில் இதை விட அதிக எண்ணிக்கையிலும் குளிப்பாட்டுகின்றனர்.
இப்படிப் பல தடவை அல்லது இரண்டு தடவைகள் குளிப்பாட்ட வேண்டும் என்று குர்ஆனிலோநபிமொழிகளிலோ கூறப்படவில்லை. பொதுவாகக் குளிப்பாட்டுமாறு தான் சொல்லப்பட்டுள்ளது.
எனவே அடக்கம் செய்வதற்கு முன் ஏதேனும் ஒரு நேரத்தில் ஒரு தடவை குளிப்பாட்டுவது தான் அவசியம்.
சுன்னத் என்றோ கடமை என்றோ கருதாமல் உடலிலிருந்து துர்வாடை வரக் கூடாது என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பாட்டினால் அது குற்றமாகாது.
மார்க்கத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற தவறான எண்ணத்தை ஊட்டும் வகையில் இருந்தால் அது தவறாகும்.

ஆடைகளைக் களைதல்
உடலைக் குளிப்பாட்டும் போது அவர் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்துவிட்டு குளிப்பாட்டினால் அதில் தவறில்லை. அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டினால் அதுவும் தவறல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். 'மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதாஅல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லைஎன்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள்என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 2733, ஹாகிம் 3/59,
பைஹகீ 3/387, அஹ்மத் 25102
'மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டுவது போன்றுஎன்ற வாசகம் அணிந்திருந்த ஆடையைக் களைந்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குளிப்பாட்டியுள்ளனர் என்பதை அறிவிக்கின்றது.
இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே அதை மாற்றியமைத்திருப்பார்கள்.
எனவே சட்டைபேன்ட்பனியன் போன்ற ஆடைகளைக் களைந்து அவரது மறைவிடம் தெரியாத வகையில் மேலே ஒரு துணியைப் போட்டுக் கொண்டு கழுவலாம்.

குளிப்பாட்டுபவர் இரகசியம் பேண வேண்டும்
உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம்.
உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர்  அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும்.
'ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி) நூல்கள்: பைஹகீ 3/395, ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315

வலப்புறத்திலிருந்து கழுவ வேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளுடைய உடலைக் குளிப்பாட்டிய பெண்களிடம் 'இவரது வலப்புறத்திலும்உளுச் செய்யும் உறுப்புகளில் இருந்தும் ஆரம்பியுங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி  நூல்: புகாரி 167, 1255, 1256

ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் மரணித்த போது 'மூன்று அல்லது ஐந்து அல்லது அதை விட அதிகமாக இவரைக் கழுவுங்கள்! ஒற்றைப் படையாகக் கழுவுங்கள்!என்று எங்களிடம் கூறினார்கள்.  அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரல நூல்: புகாரி 1254, 1263

கற்பூரம் கலந்து குளிப்பாட்டுதல்
'இவரை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் விரும்பினால் இதை விட அதிகமாக இலந்தை இலை கலந்த தண்ணீரால் கழுவுங்கள். கடைசியில் கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)  நூல்: புகாரி 1253, 1254, 1259, 1261, 1263
இறந்தவரின் உடல் நன்கு சுத்தமாக வேண்டும் என்பதற்காக சோப் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு இதை ஆதாரமாகக் கொள்ளலாம்.

குளிப்பாட்டும் போது பெண்களின் சடைகளைப் பிரித்து விடுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளைக் குளிப்பாட்டிய போது அவரது தலையில் போட்டிருந்த மூன்று சடைகளைப் பிரித்துகுளிப்பாட்டிய பின் மூன்று சடைகளைப் போட்டனர்.  அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)  நூல்: புகாரி 1260, 1254, 1259, 1262, 1263

குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?
குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமாஎன்பதில் மாறுபட்ட கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன. 'நாங்கள் இறந்தவரைக் குளிப்பாட்டி விட்டு சிலர் குளிப்பவர்களாகவும்மற்றும் சிலர் குளிக்காதவர்களாகவும்
இருந்தோம்என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
நூல்: தாரகுத்னீ 2/72
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் இது விஷயத்தில் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைத் தான் இப்னு உமர் (ரலி) கூறுகிறார்.
குன்னா (கடந்த காலத்தில் இவ்வாறு இருந்தோம்) என்ற சொல்லை இப்னு உமர் (ரலி) பயன்படுத்தியிருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறையைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை.
எனவே விரும்பியவர் குளித்துக் கொள்ளலாம். விரும்பாதவர் குளிக்காமலும் இருக்கலாம். இரண்டும் சமமானவை தான்.

ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும்.
ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ நேரடியாக எந்தக் கட்டளையும் இல்லை.
ஆயினும் குளிப்பாட்டுபவர் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் நிலை ஏற்படும் என்பதால் ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும்பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யலாம்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளைப் பெண்கள் தான் குளிப்பாட்டியுள்ளனர் என்பதை முன்னரே சுட்டிக் காட்டியுள்ளோம்.
கணவனை மனைவியும் மனைவியை கணவனும் குளிப்பாட்ட விரும்பினால் அவர்களிடையே எந்த அந்தரங்கமும் இல்லை என்பதால் இதைத் தடுக்க முடியாது.

புனிதப் போரில் கொல்லப்பட்டவர்களைக் குளிப்பாட்டக் கூடாது
அல்லாஹ்வின் பாதையில் நியாயத்துக்காகப் போரிடும் போது எதிரி நாட்டுப் படையினரால்  கொல்லப்படுபவரைக் குளிப்பாட்டாமல் இரத்தச் சுவடுடன் அடக்கம் செய்ய வேண்டும்.
உஹதுப் போரில் கொல்லபட்டவர்களைக் குறித்து 'இவர்களை இவர்களின் இரத்தக் கறையுடனே அடக்கம் செய்யுங்கள்!என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களைக் குளிப்பாட்டவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: புகாரி 1346, 1343, 1348, 1353, 4080

மார்க்கத்துடன் தொடர்பு இல்லாதவை
* குளிப்பாட்டுவதற்கு என்று சிறப்பான துஆக்கள் ஏதும் இல்லை.
* மய்யித்துக்கு நகம் வெட்டுதல்
* பல் துலக்குதல்
* அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல்
* பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல்
* வயிற்றை அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுதல்
* ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல்
* குளிப்பாட்டும் போது சந்தனத்தினாலோவேறு எதன் மூலமோ நெற்றியில் எதையும் எழுதுதல்
போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் செய்ததில்லை.

குளிப்பாட்ட இயலாத நிலையில்...
இறந்தவரின் உடல் சிதைக்கப்படாமல் இருந்தால் தான் குளிப்பாட்டுவது சாத்தியமாகும்.
குண்டு வெடிப்பில் இறந்தவர்கள்வாகன விபத்தில் இறந்தவர்கள்துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவர்கள்தீயில் எரிந்து கருகிப் போனவர்கள் ஆகியோரின் உடல்களைக் குளிப்பாட்ட இயலாத நிலை ஏற்படுவதுண்டு.
குண்டு வெடிப்புவாகன விபத்து போன்றவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லை என்றாலும் தீயில் எரிந்து போகவும்துண்டு துண்டாக சிதைக்கப்படவும் வாய்ப்புகள் இருந்தன.
ஆனாலும் எந்த முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்ற நிலையில் மரணமடைந்ததாகக் காண முடியவில்லை.
போர்க்களத்தில் மட்டும் சிலரது உடல்கள் சிதைக்கப்பட்டன. ஷஹீத்கள் என்ற முறையில் அவர்களின் உடலைக் குளிப்பாட்டக் கூடாது என்பதற்கு ஆதாரம் உள்ளது.
சாதாரணமாக இது போன்ற நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாருக்கும் ஏற்படாததால் இத்தகையோரின் உடல்களைக் குளிப்பாட்டுவது பற்றி நேரடியாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
நேரடி ஆதாரம் கிடைக்கா விட்டாலும் வேறு ஆதாரங்களின் துணையுடன் இது பற்றி நாம் முடிவுக்கு வர முடியும்.
உயிருடன் இருக்கும் ஒருவர் குளிக்க முடியாத நிலையில் இருந்தால் குளிப்பதற்குப் பதிலாக தயம்மும் செய்யுமாறு மார்க்கம் கூறுகிறது. சிதைந்து போன உடல்களைக் குளிப்பாட்டுவது அதை விடக் கடுமையானது. எனவே குளிப்பாட்டுவதற்குப் பதிலாக தயம்மும் செய்யலாம். அதற்கும் இயலாத நிலை ஏற்பட்டால் ஒன்றும் செய்யாமல் அடக்கம் செய்வது குற்றமாகாது. குளிப்பாட்ட இயலாது என்ற நிலையில் தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.
'நான் உங்களுக்கு ஒரு கட்டளையிட்டால் அதை இயன்ற வரை செய்யுங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)   புகாரி 7288
எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மேலே நாம் சிரமப்படுத்த மாட்டோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
திருக்குர்ஆன் 2:286
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.
திருக்குர்ஆன் 6:152
எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை.
திருக்குர்ஆன் 7:42
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.
திருக்குர்ஆன் 23:62
வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
திருக்குர்ஆன் 65:7 எனவே நம்மால் இயலாத நிலையில் எந்தக் காரியத்தையும் விட்டு விடுவது குற்றமாகாது.

கஃபனிடுதல்
குளிப்பாட்டிய பின் துணியால் உடலை மறைக்க வேண்டும். இதை கஃபன் என்று மார்க்கம் கூறுகிறது.
கஃபன் என்றால் அதற்கென குறிப்பிட்ட சில வகைகள் உள்ளதாக மக்கள் நம்புகின்றனர்.
சட்டைஉள்ளாடைவேட்டிமேல்சட்டைதலைப்பாகைபின்னர் முழு உடலையும் மறைக்கும் துணி இப்படி இருந்தால் தான் அது கஃபன் என்று நினைக்கிறார்கள்.
அது போல் பெண்களின் கஃபன் என்றால் அதற்கென சில வகை ஆடைகளை நிர்ணயம் செய்து வைத்துள்ளனர்.
கஃபன் இடுவதற்கு இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.
உடலை மறைக்க வேண்டும் அவ்வளவு தான். உள்ளே எதையும் அணிவிக்காமல் உடலை ஒரு போர்வையால் போர்த்தி மறைத்தால் அதுவும் கஃபன் தான். அதுவே போதுமானதாகும்.
அது போல் ஒருவர் வாழும் போது அணிந்திருந்த சட்டைகைலியை அணிவித்தால் அதுவும் கஃபன் தான்.
அதே நேரத்தில் மேற்கண்டவாறு சட்டைஉள்ளாடை என்று கஃபனிட்டால் அது நபிவழி என்ற நம்பிக்கையில்லாமல் நம்முடைய திருப்திக்காகச் செய்தால் அதில் தவறில்லை.
பின் வரும் தலைப்புகளில் எடுத்துக் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.

அழகிய முறையில் கஃபனிடுதல்
உடலின் பாகங்கள் திறந்திருக்காத வகையிலும்உள் உறுப்புகளை வெளிக்காட்டாத வகையிலும்ஏனோ தானோ என்றில்லாமலும் நேர்த்தியாகக் கஃபன் இட வேண்டும்.
'உங்களில் ஒருவர் தமது சகோதரருக்குக் கஃபன் இட்டால் அதை அழகுறச் செய்யட்டும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவி : ஜாபிர் (ரலி) : முஸ்ம் 1567

வெள்ளை ஆடையில் கஃபனிடுதல்
கஃபன் ஆடை எந்த நிறத்திலும் இருக்கலாம்ஆயினும் வெள்ளை ஆடையே சிறந்ததாகும்.
'நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ 915, அபூ தாவூத் 3539, இப்னு மாஜா 1461  அஹ்மத் 2109, 2349, 2878, 3171, 3251
வெள்ளை ஆடையில் கஃபனிடுவது கட்டாயம் இல்லை என்பதையும் அதுவே சிறந்தது என்பதையும் மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறியலாம்.

வண்ண ஆடையிலும் கஃபன் இடலாம்
வண்ண ஆடையில் கஃபனிடுவது பொருளாதார ரீதியாகச் சிரமமாக இல்லாதவர்கள் வண்ண ஆடையில் கஃபனிட இயலுமானால் அவ்வாறு கஃபனிடுவது தவறில்லை.
'உங்களில் ஒருவர் மரணமடைந்து அவர் வசதி பெற்றவராகவும் இருந்தால் கோடுகள் போட்ட ஆடையில் கஃபனிடலாம்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்கள்: அபூ தாவூத் 2739

தைக்கப்பட்ட ஆடையில் கஃபனிடுதல்
தைக்கப்படாத ஆடையில் தான் கஃபனிட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. தைக்கப்பட்ட மேலாடைகீழாடை ஆகியவற்றாலும் கஃபனிடலாம்.
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்த போது அவரது மகன் (இவர் முஸ்லிமாக இருந்தார்) நபிகள் நாயகத்திடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையைத் தாருங்கள் (அதில்) அவரைக் கஃபனிட வேண்டும்என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவரிடம் கொடுத்தார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1269, 4670, 5796
ஒரு கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தார். அப்போரில் கழுத்தில் அம்பு பாய்ந்து வீர மரணம் அடைந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஜுப்பாவை (குளிராடை - ஸ்வெட்டர்) அவருக்குக் கஃபன் ஆடையாக அணிவித்தார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)  அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)  நூல்: நஸயீ 1927

பழைய ஆடையில் கபனிடுதல்
... குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (குளிப்பாட்டி முடித்ததும்) நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம். தமது இடுப்பிலிருந்து வேட்டியைக் கழற்றி 'இதை அவருக்கு உள்ளாடையாக்குங்கள்!என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)  நூல்: புகாரி 1253, 1254, 1257, 1259, 1261
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அணிந்திருந்த ஆடையைத் தமது மகளுக்குக் கஃபனாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதால் பழைய ஆடைகளைக் கஃபனாகப் பயன்படுத்துவது தவறல்ல என்று அறியலாம்.

உள்ளாடை அணிவித்தல்
இறந்தவரின் உடலை முழுமையாக மறைப்பது தான் கஃபன் என்றாலும் மேலே போர்த்தும் துணியுடன் உள்ளாடையாக மற்றொரு துணியைச் சேர்த்துக் கொள்ளலாம். முந்தைய தலைப்பில் எடுத்துக் காட்டிய ஹதீஸே இதற்கு ஆதாரமாக உள்ளது.

இஹ்ராம் அணிந்தவரின் கஃபன் ஆடை
ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் மரணித்து விட்டால் இஹ்ராமின் போது அணிந்த ஆடையிலேயே அவரைக் கஃபனிட வேண்டும்.
இஹ்ராம் அணிந்த ஒருவர் அரஃபா மைதானத்தில் நபிகள் நாயகத்துடன் இருந்த போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து கழுத்து முறிந்து இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவரைத் தண்ணீராலும்இலந்தை இலையாலும் குளிப்பாட்டுங்கள். இவருடைய இரண்டு ஆடைகளில் இவரைக் கஃபனிடுங்கள். இவருக்கு நறுமணம் பூச வேண்டாம். இவரது தலையை மறைக்க வேண்டாம். ஏனெனில் இவர் கியாமத் நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1850, 1851

கஃபனிட்ட பின் நறுமணம் பூசுதல்
கஃபனிட்ட பின் இறந்தவரின் உடலுக்கு நறுமணம் பூசலாம். இஹ்ராம் அணிந்தவருக்கு நறுமணம் தடை செய்யப்பட்டதால் அவர் இறந்த பிறகு நறுமணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர்க்கச் சொன்னார்கள். இதிலிருந்து மற்றவர்களின் உடலுக்கு நறுமணம் பூசலாம் என்று அறிய முடியும்.

தலையையும் மறைத்து கஃபனிட வேண்டும்
கஃபன் என்பது தலை உள்ளிட்ட முழு உடலையும் மறைக்கும் வகையில் இருக்க வேண்டும். உடம்பை மறைத்துவிட்டு தலையை மட்டும் விட்டுவிடக் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஹிஜ்ரத் செய்தோம்.  அதற்கான நன்மை அல்லாஹ்விடம் உறுதியாகி விட்டது. தமது நன்மையில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமல் மரணித்தவர்களும் எங்களில் இருந்தனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவாராவார். அவர் உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவர் ஒரு போர்வையை மட்டுமே விட்டுச் சென்றார். அதன் மூலம் அவரது தலையை மறைத்தால் கால்கள் தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை தெரிந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இதன் மூலம் இவரது தலையை மூடுங்கள். இவரது கால் பகுதியில் இத்கர் என்ற புல்லைப் போடுங்கள்எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத் (ரலி)
நூல்: புகாரி 4045, 4047, 1275, 1276, 3897, 3914, 4082, 6448
கஃபனிடும் போது தலையை மூட வேண்டும் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிய வரும்.
இஹ்ராம் அணிந்தவர் பற்றிய ஹதீஸில் அவரது தலையை மறைக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில் இஹ்ராம் அணிந்தவர் தலையை  மறைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்குத் தலையை மறைக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து மற்றவர்களின் தலை மறைக்கப்பட வேண்டும் என்பதை விளங்கலாம்.

கஃபனிடும் அளவுக்குத் துணி கிடைக்கா விட்டால்...
சில சமயங்களில் முழு உடலையும் மறைக்கும் அளவுக்கு துணி கிடைக்காமல் போகலாம்.  அல்லது அதை வாங்கும் அளவுக்கு வசதியில்லாமல் போகலாம். அது போன்ற சந்தர்ப்பங்களில் வைக்கோல் போன்ற கிடைக்கும் பொருட்களால் எஞ்சிய பகுதியை மறைக்க வேண்டும். முந்தைய தலைப்பில் இடம் பெற்றுள்ள நபிமொழியே இதற்கு ஆதாரமாகும்.

புதிய ஆடையில் கஃபனிடுதல்
மேற்கண்ட நபிமொழியில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் பழைய ஆடையிலேயே கஃபனிடப்பட்டார்கள் என்பதை அறியலாம்.
ஆயினும் புதிய ஆடையில் கஃபனிடுவது தவறில்லை.
ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மேலாடையைக் கொண்டு வந்தார். 'நீங்கள் இதை அணிய வேண்டும் என்பதற்காக என் கையால் நெய்து வந்திருக்கிறேன்என்று அவர் கூறினார். அதை ஆவலுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் 'இது எவ்வளவு அழகாக உள்ளது. எனக்குத் தாருங்கள்என்று கேட்டார். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை மிகவும் விருப்பத்துடன் அணிந்திருக்கிறார்கள். எவர் கேட்டாலும் மறுக்க மாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் அவர்களிடம் இதைக் கேட்டு விட்டாயே!என்று மற்றவர்கள் அவரைக் கடிந்து கொண்டார்கள். அதற்கு அவர் 'நான் இதை அணிவதற்காகக் கேட்கவில்லைஎனக்குக் கஃபனாக அமைய வேண்டும் என்பதற்காகவே கேட்டேன்என்றார். அதுவே அவரது கஃபனாக அமைந்தது. (சுருக்கம்)  அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி  நூல்: புகாரி 2093, 1277, 5810, 6036

தனது கஃபனை தானே தயார்படுத்திக் கொள்ளலாம்
நாம் மரணித்த பின் நமக்கு இது தான் கஃபனாக அமைய வேண்டும் என்று விரும்பி தனது  கஃபன் துணியை ஒருவர் தயார் படுத்தி வைக்கலாம். அவ்வாறு ஒருவர் தயார் படுத்தி வைத்திருந்தால் அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.
மேற்கண்ட ஹதீஸிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

தைக்கப்படாத ஆடையில் கஃபனிடுதல்
(என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்களின் மரண வேளையில் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், 'நபிகள் நாயகத்தை எத்தனை ஆடையில் கஃபனிட்டீர்கள்?' என்று கேட்டார்கள். 'யமன் நாட்டில் தயாரிக்கப்பட்ட வெள்ளையான மூன்று ஆடைகளில் கஃபனிட்டோம். அதில் சட்டையோதலைப்பாகையோ இருக்கவில்லைஎன்று நான் கூறினேன். 'எந்த நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்?' என்று அவர்கள் கேட்டார்கள். 'திங்கள் கிழமைஎன்று நான் கூறினேன். 'இன்று என்ன கிழமை?' எனக் கேட்டர்கள். 'திங்கள் கிழமைஎன்று நான் கூறினேன். 'இன்றிரவுக்குப் பின் எனக்கு மரணம் வந்துவிடும் என்றே எதிர்பார்க்கிறேன்என்று கூறினார்கள். தாம் அணிந்திருந்த ஆடையை உற்று நோக்கினார்கள். அதில் குங்குமப் பூ கறை இருந்தது. 'எனது இந்த ஆடையைக் கழுவி இத்துடன் மேலும் இரண்டு ஆடைகளை அதிகமாக்குங்கள். அதில் எனக்குக் கஃபனிடுங்கள்என்று கூறினார்கள். 'இது மிகவும் பழையதாக உள்ளதே!என்று நான் கூறினேன். அதற்கவர்கள் 'உயிருடன் உள்ளவர் தான் புதிய ஆடைக்கு அதிகம் தகுதியானவர். இந்த ஆடை சீழ் சலத்திற்குத் தானே போகப் போகிறதுஎன்றார்கள். (ஆனால் அவர்கள் விரும்பிய படி திங்கள் கிழமை மரணிக்கவில்லை) செவ்வாய்க் கிழமை மாலை தான் மரணித்தார்கள். விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  புகாரி 1378
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தைக்கப்பட்ட சட்டையில் கஃபனிடப்படவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

முக்கியப் பிரமுகருக்கு தலைப்பாகையுடன் கஃபனிடலாமா?
மார்க்க அறிஞர்கள் போன்ற பிரமுகர்கள் கஃபனிடப்படும் போது அவர்களுக்குத் தலைப்பாகை கட்டி அதனுடன் கஃபனிடும் வழக்கம் பல பகுதிகளில் காணப்படுகிறது. வாழும் போது தனியாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டது போல மரணித்த பிறகும் வேறுபாடு காட்டப்படுவது கொடுமையிலும் கொடுமையாகும்.
மாமனிதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகைசட்டையுடன் கஃபனிடப்படவில்லை என்ற மேற்கண்ட ஹதீஸிலிருந்து அவர்கள் செய்வது ஆதாரமற்றது என்பதை அறியலாம்.
கிரீடம்தலைப்பாகை போன்றவற்றை அணிந்து கபனிடுவது கெட்ட முன்மாதிரியாகும்.

வீரமரணம் அடைந்தவர்களை அவர்களின் ஆடையில் கஃபனிடுதல்
நியாயத்துக்காக நடக்கும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டவர்களை அவர்கள் அணிந்திருந்த ஆடையிலேயே கஃபனிடுதல் நல்லது.
முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களுக்கு அணிந்திருந்த ஆடையே கஃபனாக ஆனது என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
'அவர்களை (ஷஹீத்களை) அவர்களின் ஆடைகளிலேயே கஃபனிடுங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸஃலபா (ரலி) நூல்: அஹ்மத் 22547
ஆயினும் இது கட்டாயமானது அல்ல.
ஹம்ஸா அவர்கள் கொல்லப்பட்ட போது அவர்களின் சகோதரி ஸஃபிய்யா அவர்கள் இரண்டு ஆடைகளைப் போர்க்களத்திற்குக் கொண்டு வந்து அதில் தனது சகோதரர் ஹம்ஸாவுக்குக் கஃபனிடுமாறு கூறினார்கள். ஹம்ஸாவுக்கு அருகில் மற்றொருவரும் கொல்லப்பட்டுக் கிடந்ததால் இருவரையும் தலா ஒரு ஆடையில் கஃபனிட்டோம்.
அறிவிப்பவர்: ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) நூல்: அஹ்மத் 1344
ஹம்ஸாவும்மற்றொருவரும் போரின் போது அணிந்திருந்த ஆடையில் கஃபனிடப்படாமல் வேறு ஆடையில் கஃபனிடப் பட்டார்கள். இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்திருப்பார்கள்.

நெருக்கடியான நேரத்தில் ஒரு ஆடையில் இருவரைக் கஃபனிடலாம்
உஹதுப் போரில் கொல்லப்பட்ட என் தந்தையும்என் சிறிய தந்தையும் ஒரு போர்வையில் கஃபனிடப்பட்டார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)  நூல்: புகாரி 1348
உஹதுப் போரில் கொல்லப்பட்ட இருவரை ஒரு ஆடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபனிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)  நூல்: புகாரி 1343. 1348, 4080

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்