Social Icons

Tuesday 23 October 2012

ஸல்மான் அல்-ஃபாரிஸி

தனது பண்ணையில் பேரீச்சமரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் யூதன் ஒருவன். அவனை நோக்கி வேகவேகமாக வந்தான் அவனுடைய உறவினன். பரபரப்பு, முகத்தில் ஏகக் கோபம்! அமர்ந்திருந்தவனிடம், “பனூ ஃகைலா கோத்திரத்தினரை அல்லாஹ் அழிப்பானாக,” என்றான். மதீனாவின் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கோத்திரத்தினரையும் 'பனூ ஃகைலா' என்று குறிப்பிடுவது யூதர்களின் வழக்கம்.

நிமிர்ந்து பார்த்தவனிடம், “மக்காவிலிருந்து ஒருவர் புலம்பெயர்ந்து வந்திருக்கிறாராம்; தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்கிறாராம்; குபாவில் தங்கியிருக்கிறாராம். புத்திகெட்டுப்போன இவர்களும் அவரை வரவேற்க அங்குக் குழுமியிருக்கிறார்கள்” என்றான் உறவினன்.
இத்தனை நாளும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிச் செய்திமேல் செய்தியாக அறிந்திருந்தார்கள் மதீனத்து யூதர்கள். அப்படிக் கேள்விப்பட்ட நாள்முதலாக நபியவர்களின்மேல் வெறுப்பு வளர்த்திருந்தார்கள் - காத்திருந்த தங்கள் இனத்தில் தோன்றாத நபி, பனீ இஸ்மாயீல் இனத்தில் அவதரித்துவிட்டாரே என்று. அது ஒருபுறம் என்றால் தங்களது தந்திரத்தால் கட்டிப்போட்டு அடித்துக்கொண்டு உருண்டு புரள வைத்திருந்த அவ்ஸ், கஸ்ரஜ் மக்கள் மத்தியில் வரலாறு காணாத மாற்றம் ஏற்பட்டுப்போய், ‘சகோதரா’ என்கிறார்கள்; அன்பாய்க் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள்; என்ன கொடுமை இது? அவ்வளவுதானா? காலங் காலமாக பிரித்தாண்டு வந்த நரித்தன ஆட்சி முடிவுக்கே வந்துவிட்டதா?’ என்ற அப்பட்ட வயிற்றெரிச்சல் மற்றொருபுறம்.
இது அத்தனைக்கும் காரணமானவர் இதோ யத்ரிபின் வெளிவாசல்வரை வந்துவிட்டார் என்றால்? அவ்ஸ், கஸ்ரஜ் மக்களைச் சபித்தான் செய்தி சொல்ல வந்த யூதன்.
அப்பொழுது அந்த மரத்தின்மேல் அமர்ந்து அதை வெட்டிச் சீவிச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார் அமர்ந்திருந்த யூதனின் அடிமை. வந்தவன் சொன்ன செய்தி அவர் காதிலும் தெளிவாய் விழுந்தது. அடுத்த நொடி அவரது உடம்பெல்லாம் சூடாகி நடுங்க ஆரம்பித்துவிட்டது. உவமையெல்லாம் இல்லை. மெய்யான நடுக்கம்! நடுங்கிய நடுக்கத்தில் எங்கே ‘தொப்’பென்று தாம் தம் எசமானன் தலையிலேயே விழுந்துவிடுவோமா என்று பயந்துபோய், சமாளித்துக்கொண்டு அவசர அவசரமாக மரத்திலிருந்து இறங்கிவிட்டார் அவர். செய்தியின் தாக்கமும் ஆச்சரியமும் மகிழ்வும் கலந்துபோய் அதை மீண்டும் ஊர்ஜிதம் செய்துகொள்ள, செய்தி சொன்னவனிடம், “இப்பொழுது நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்.
‘பொளேர்’ என்று அடிமைக்கு அடி விழுந்தது. எசமானன்தான் அடித்தான். அவனைப் பொருத்தவரை செய்தியே சோகச்செய்தி. இதில் அடிமையின் துடுக்குத்தனம் வேறா?
“என்ன ஆச்சு உனக்கு? திரும்பிப்போய் ஒழுங்கு மரியாதையாய் உன் வேலையைப் பார்” என்று கத்தினான்.
அடிபட்ட இடத்தைத் தடவிக்கொண்டே, “ஒன்றுமில்லை. ஆவலாய் இருந்தது. அறிந்துகொள்ளவே கேட்டேன்,” என்று அங்கிருந்து அகன்றவர், ‘ஆஹா! எத்தனை ஆண்டுக் காத்திருப்பு இது. இதோ கண்ணுக்கு எட்டும் தொலைவில் நிசம்’ என்று மாலை நேரத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.
அதற்குள் நாம் நீண்ட ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று வந்துவிடுவோம். அப்படியே மூச்சை இழுத்துவிட்டு, ஆசுவாசப் படுத்திக்கொள்வது நல்லது. நீண்ட நெடிய பயணமும் செய்ய வேண்டியுள்ளது.
oOo

இஸ்ஃபஹான்!
ஈரான் நாட்டில் அதன் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கியமான மாநிலம். இன்று ஈரான் என்று அழைக்கப்படும் நாடு அக்காலத்தில் பாரசீக சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதி. இந்த இஸ்ஃபஹான் மாநிலத்தில் ஜய்யான் என்றொரு கிராமம். அந்தக் கிராமத்தில் இஸ்பஹான் நகரின் திஹ்கான் வசித்து வந்தார். திஹ்கான் என்றால் நகரின் தலைவர் அல்லது மேயர் போன்ற பெரிய பொறுப்புக்குரியவர். நிறையச் செல்வம்; அந்தஸ்து வசதியுடன் வாழ்ந்து வந்தார் திஹ்கான். இவருக்கு ஸல்மான் என்றொரு மகன். பேர் சொல்லப் பிள்ளை பிறந்துவிட்டான் என்று அந்த மகன் மீது அவருக்கு ஏகப்பட்ட பிரியம், சொல்லி மாளாத பாசம். மிகையில்லை. தம் மகனை ஒரு கன்னிப்பெண்ணைப் போல் வீட்டில் வைத்துப் பொத்திப் பொத்தி வளர்க்க ஆரம்பித்தார் தந்தை. மகனுக்கு வெளியுலகம் தெரியாமல் வீடே உலகமாகிப் போனது.
பாரசீகர்களின் கடவுள் நெருப்பு. அப்படித்தான் நம்பி அதை வணங்கிக்கொண்டிருந்தார்கள் அம்மக்கள். திஹ்கான் வீட்டிலும் தனித்துவச் சிறப்புடன் நெருப்பு தெய்வம் ஒன்றிருந்தது. அந்தத் தீயை அணையா விளக்காகப் பாதுகாக்க, ‘மகனே உன் பொறுப்பு’ என்று அந்த தெய்வத்தைப் பராமரிக்கும் முக்கியப்பணியைத் தந்துவிட்டார் திஹ்கான். எந்நேரமும் அந்தத் தீ எரிந்து கொண்டே இருக்க வேண்டும். ஸல்மானும் பக்தி சிரத்தையாய் அந்தப் பணியைச் செய்துவந்தார்.
செல்வ வசதி படைத்திருந்த திஹ்கானுக்குப் பெரிய பண்ணை நிலம் இருந்தது. அதில் நல்ல விளைச்சல். அதைப் பராமரித்து வருவாய் ஈட்டிக்கொண்டிருந்தார் அவர். ஒருநாள் அவரால் பண்ணைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. என்ன செய்யலாம் என்று யோசித்தவர் ஸல்மானை அழைத்து, “மகனே இன்று நான் ஒரு முக்கிய வேலையைக் கவனிக்க வேண்டியுள்ளது. நீ பண்ணைக்குச் சென்று அங்குள்ள காரியத்தை முடித்துவிட்டு வா” என்று விபரமெல்லாம் சொல்லி அனுப்பிவைத்தார்.
முக்கியமாய் மற்றொன்றையும் சொன்னார். “சென்ற வேலையை முடித்துவிட்டு உடனே திரும்பிவிடு. என்னை இங்கே காக்க வைத்துவிடாதே. நிலம், சொத்து, சுகம் அனைத்தையும்விட நீதான் எனக்கு மிக முக்கியம்.”
பொறுப்பாய்த் தலையை ஆட்டிவிட்டுக் கிளம்பினார் ஸல்மான். வீட்டிலேயே அடைந்து கிடந்தவருக்கு அந்த வாய்ப்பு புது சுவாசம் அளிக்க, சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்தவாறே பண்ணையை நோக்கி நடக்க, திசை மாறப்போகும் அவரது வாழ்க்கைப் பயணத்தின் முன்னுரை அவருக்கே தெரியாமல் துவங்கியது. வழியில் அவரது கண்களில் பட்டது ஒரு கட்டடம். ‘இது என்ன வித்தியாசமாக இருக்கிறதே’ என்று ஆர்வமுடன் அதை நெருங்கியவருக்கு, அது ஒரு கிறித்தவத் தேவாலயம் என்று தெரிய வந்தது. அப்படி ஒரு மதம் இருப்பதோ, அதற்காக ஆலயம் இருப்பதோ எதுவுமே தெரியாமல் வளர்ந்து வந்தவர் ஸல்மான். அதனால் எக்கச்சக்க ஆர்வம். அப்பொழுது ஆலயத்தில் உள்ளே பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருக்க, அது இதுவரை அவர் அறிந்திராத ஓசை. உள்ளே நுழைந்தார் ஸல்மான்.
கிறித்தவர்களின் வழிபாட்டையும் பிரார்த்தனையும் உன்னிப்பாய்க் கவனித்தவருக்கு இனந்தெரியா ஈர்ப்பு. பிரமித்தவர், “சத்தியமாக இந்த மதம் நம் மதத்தைவிடச் சிறப்பாக இருக்கிறது,” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
அங்கு இருந்தவர்களிடம் ஆர்வமுடன், “இந்த மதம் எங்கிருந்து வந்தது?”
“அஷ்-ஷாம் பகுதியிலிருந்து” என்று பதில் கிடைத்தது. ஷாம் என்பது இன்றைய ஸிரியாவின் பகுதி.
பண்ணை மறந்து போனது; வந்த காரியம் மறந்து போனது. மாலைவரை அங்கேயே அமர்ந்து கொட்டக் கொட்ட வேடிக்கை பார்த்துவிட்டு, இரவு நேரத்தில்தான் வீட்டிற்குத் திரும்பினார் ஸல்மான். அங்கோ, சென்ற மகன் திரும்பி வரவில்லையே என்று நாலாபுறமும் ஆட்களை அனுப்பிவிட்டு, நிலைகொள்ளாமல் தவித்துப்போய் நின்றிருந்தார் தந்தை. மகனைக் கண்டவுடன்தான் ‘அப்பாடா’ என்று அவருக்கு மூச்சே வந்தது.
“மகனே எங்கே சென்றாய்? கிளம்பும்போதே சொல்லித்தானே அனுப்பினேன். பாதை தவறிவிட்டாயா?” கவலையுடனும் அக்கறையுடனும் விசாரித்தார் தந்தை.
மெய் சொன்னார் மகன். “தந்தையே, கிறித்தவ ஆலயம் ஒன்றைக் கண்டேன். அங்கே மக்கள் வழிபடுவதைக் கண்டேன். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அங்கேயே இருந்து அவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். சென்ற வேலை மறந்துபோய் இருட்டிய பிறகுதான் கிளம்பினேன்.”
மகனைக் கண்டதும் வந்த நிம்மதி அவனது பதிலைக்கேட்டுத் தொலைந்துபோனது. திகிலடைந்துபோனார் தந்தை! ‘என்ன காரியம் செய்துவிட்டு வந்து நிற்கிறான் இவன்?’
“மகனே! அவர்களது மதத்தில் எந்தப் பிரயோசனமும் இல்லை. உன் மதமே உயர்வானது. நம் மூதாதையர்களின் இந்த மதம்தான் எல்லா மதங்களிலும் சிறப்பானது.”

இளங்கன்று; பயமோ பின்விளைவோ அறியாது பதில் பேசினார். “ம்ஹும்! சத்தியமாகச் சொல்கிறேன். அவர்களது மதம் நம்முடைய மதத்தைவிடச் சிறந்தது.”
‘ஆஹா! ஒரே நாளில் இப்படிப் புத்தி பேதலித்துப் போய்விட்டானே என் மகன்’ என்று இடிந்துபோனவர், உடனே ஒரு காரியம் செய்தார். வீட்டின் அறையொன்றில் ஸல்மானைத் தள்ளி, கால்களைச் சங்கிலியால் கட்டி, அறையை இழுத்துப் பூட்டினார். வீட்டிலே பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட பிள்ளை, இப்பொழுது வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். ஆனால் தீயை இறைவனாய் வழிபட்டு வளர்ந்த ஸல்மானுக்குள் மெய் இறைஞானம் தேடவேண்டும் என்ற புதுத் தீ பற்றிக்கொண்டது. எப்படியோ, யார் மூலமோ கிறித்தவர்களுக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். “ஸிரியாவைச் சேர்ந்த யாரேனும் இவ்வூருக்கு வந்தால் எனக்குத் தகவல் அனுப்புங்களேன்.” இந்த மதம் அங்கிருந்து வந்தது என்றுதானே கிறித்தவர்கள் சொன்னார்கள். அங்கேயே சென்று பாடம் பயில்வோம் என்று அவர் மனத்துள் முடிவு.
அதற்கு நெடுநாள் காத்திருக்க வேண்டிய தேவையின்றி ஸிரியாவிலிருந்து வர்த்தகர்களின் குழுவொன்று அங்கு வந்து சேர்ந்தது. அந்தத் தகவலை ஸல்மானுக்கு அனுப்பி வைத்தனர் கிறித்தவர்கள். அதுவரை வீட்டிலேயே சமர்த்துப் பிள்ளையாகக் காத்திருந்தவர், ‘அறிவுத் தேடலுக்கும் உண்டோ தடுக்கும் தாழ்’ என்று விலங்கை உடைத்து விடுவித்துக்கொண்டு வீட்டை விட்டு நழுவினார். அந்த வர்த்தகர்களுடன் பேசி, யார் கண்ணிலும் படாமல் அவர்களுடன் ஸிரியாவுக்குக் கிளம்பினார் ஸல்மான்.
இறைஞானத் தேடல் துவங்கியது.
ஸிரியாவை அடைந்ததும் அங்கு இருந்தவர்களிடம் அவர் கேட்ட முதல் கேள்வி, “இங்கு உங்கள் மதத்தின் பெரிய குரு யார்?”
“அவர் இந்த ஊர் ஆலயத்தின் தலைமைகுரு,” என்று பதில் கிடைத்தது. கற்கும் கல்வி ஞானம் தலைசிறந்தவரிடமிருந்து கிடைக்க வேண்டும் என்ற இயல்பான ஆர்வம் அமைந்திருந்தது சூட்டிகையான ஸல்மானிடம்.
அவரிடம் சென்றார் ஸல்மான். சுற்றி வளைக்கவில்லை. “நான் கிறித்தவனாக வேண்டும். உங்களுடைய சீடனாக இணைந்து இறை ஊழியம் செய்ய விரும்புகிறேன். உங்களிடம் இறை கல்வி கற்று இறை வழிபாடு புரிவதே எனது குறிக்கோள்,” என்று நேரே விஷயத்திற்கு வந்தார். “வா உள்ளே!” என்று அரவணைத்து ஏற்றுக்கொண்டார் அந்த தலைமைக் குரு. அவரின் சீடனாக ஆலயத்தில் சேவை புரிவதும், கற்பதுமாகப் புது வாழ்க்கை துவங்கியது. ஆனால் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி!
நாம் இப்பொழுதெல்லாம் அடிக்கடிக் கேள்விப்படுகிறோமே போலிச் சாமியார்கள் - அவர்களைப்போல் அந்த குரு மிக மோசமான ஒரு கள்ளப் பேர்வழி. ‘தானமளியுங்கள்; தர்மம் புரியுங்கள். இறைவனின் மகத்தான நற்கூலி உங்களுக்குக் கிடைக்கும்’ என்று அவர் நாள்தோறும் புரியும் உபதேசம் கேட்டு, அந்த ஊர் மக்களும் அவரிடம் அள்ளி அள்ளித் தந்து கொண்டிருந்தனர். அவை அனைத்தையும் மூட்டைக் கட்டி, ஏழை, எளியவருக்கு எதுவும் ஈயாமல் தெளிவான புத்தியுடன் சுருட்டிக்கொண்டிருந்தார் அந்தத் தலைமை குரு. இதையெல்லாம் பார்த்து, ‘அட கிராதகா! இவ்வளவுதானா நீ?’ என்றாகிவிட்டது ஸல்மானுக்கு. அவரை மிகத் தீவிரமாய் வெறுக்கத் துவங்கினார் அவர். அதைத்தவிர அவரால் அப்பொழுது ஏதும் செய்ய இயலாத நிலை.
இப்படிச் சேர்த்துச் சேர்த்து வைத்ததையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு ஒருநாள் இறந்துபோனார் அந்த குரு. சோகமும் பக்தியும் மரியாதையுமாய் அவரை அடக்கம் செய்ய வந்தனர் கிறித்தவர்கள். அந்த நேரத்தில் சரியாக அவர்களிடம் உண்மையைப் போட்டு உடைத்தார் ஸல்மான். “மக்களே! நீங்கள் மட்டற்ற மரியாதை வைத்திருந்த இவர் ஒரு மோசடிக்காரர். உங்களையெல்லாம் தானமளிக்கும்படி ஊக்கப்படுத்தி, நீங்கள் அள்ளி அளித்தீர்களே செல்வம் அவற்றையெல்லாம் ஏழைகளுக்குத் தராமல் தமக்கென எடுத்துக்கொண்டு உங்களை ஏமாற்றி வாழ்ந்தார் இவர்.”
“உனக்கு எப்படித் தெரியும்?”
”இங்கே வாருங்கள்,” என்று அவர்களை அழைத்துச்சென்று அதைப் புதைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டிவிட்டார் ஸல்மான். தோண்டிப் பார்த்தவர்களுக்குப் புதையல் கிடைத்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு கொள்கலம் நிறையத் தங்கமும் வெள்ளியும் நிறைந்து கிடந்தன. அதிர்ந்து போனார்கள் மக்கள். அதிர்ச்சி கடுங்கோபமாக மாறியது. ‘கொல்லுடா அவனை’ என்றும் சொல்ல முடியாது. இறந்துவிட்டான். அதனால், “இந்த மோசடிக்காரனை அடக்கம் செய்யக்கூடாது. தூக்கு பிணத்தை,” என்று அதைச் சிலுவையில் அறைந்து ஆத்திரம் குறையும்வரை கல்லால் அடித்துத் தீர்த்தார்கள் மக்கள்.
எல்லாம் அடங்கிச் சிலநாள் கழிந்ததும் புதியதொரு மதகுரு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொழுது அவரிடம் சீடனாக இணைந்து கொண்டார் ஸல்மான்.
இறைஞானத் தேடல் தொடர்ந்தது.
இங்கு ஒரு விஷயம் மிக முக்கியமாய்க் கவனிக்க வேண்டியுள்ளது. தூய மார்க்கம் தேடிவந்து, அக் காலகட்டத்தில் மீதமிருந்த இறை மார்க்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் இள வயதினரான ஸல்மான். வழிகாட்டி அழைத்துச் செல்ல வேண்டிய தலைமை குருவோ அப்பட்டமான அயோக்கியன் என்று அறிய வந்ததும், அந்தத் தனி நபரையும் அவனது ஒழுக்கக்கேட்டையும்தான் அவர் வெறுத்தாரே தவிர, கள்ளகுரு செய்த மோசடிகளுக்கு அவர் பின்பற்றிய மார்க்கம் பொறுப்பேற்காது என்பதை அறிந்து உணரும் புத்திசாலித்தனம் இருந்தது ஸல்மானுக்கு. ஆனால் இன்று பலருக்கும் இஸ்லாத்தையும் தனி நபர் ஒழுக்கத்தையும் இணைத்துக் குழப்பிக் கொள்ளும் பேதைமை நிறைய மிச்சமிருக்கிறது.
புதிய மதகுரு மிகவும் இறையச்சமுள்ள கடுமையான துறவி. மறுமை வாழ்வே இலக்கு; இரவும் பகலும் இடைவிடாது இறை வழிபாடு; என்று வாழ்பவராக இருந்தார் அவர். ஸல்மானுக்கு அவர் மீது எக்கச்சக்க அன்பும் பாசமும் ஏற்பட்டு விட்டது. அவரிடம் நீண்ட காலம் தங்கியிருந்தார். முதுமை அந்த மதகுருவை மெதுமெதுவே ஆட்கொள்ள, ஒருநாள் இறுதித் தருணத்தை அடைந்தார் அவர். கவலையுடன் அவரைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார் ஸல்மான். அடுத்து என்ன செய்வது யாரிடம் செல்வது என்ற கவலை.
“தலைமை குருவே! அல்லாஹ்வின் ஆணைப்படி இறுதித் தருணம் தங்களை நெருங்கி விட்டது. உங்களிடம் கொண்டிருந்த அன்பும் ஈடுபாடும்போல் எனக்கு எவரிடமும் இருந்ததில்லை. தங்களுக்குப் பிறகு நான் யாரிடம் செல்வது? யாரைத் தாங்கள் பரிந்துரைப்பீர்கள்?”
“மகனே! என்னைப்போல் வாழ்பவர் இக்காலத்தில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை ஒரே ஒருவரைத் தவிர. அவர் மோஸுல்  எனும் ஊரில் வசிக்கிறார். வழி பிறழாமல், மாறாமல் நேரான இறைவழியில் வாழ்பவர் அவர். அவரிடம் செல்.”
மதகுருவின் மூச்சு அடங்கியது. அழுதுவிட்டு, வருத்தப்பட்டுவிட்டு, நல்லடக்கம் முடிந்ததும், ‘மோஸுலுக்கு எப்படிப் போகணும்?’ என்று வழிகேட்டுக் கிளம்பினார் ஸல்மான். மோஸுல் இராக்கில் உள்ள நகரம். ஸிரியாவிலிருந்து ஏறத்தாழ எழுநூறு கி.மீ. தொலைவு!
இறைஞானத் தேடல் தொடர்ந்தது.
மோஸுலை அடைந்தவர் தாம் நாடி வந்த மதகுருவைத் தேடிப்பிடித்தார். தம் கதையை நிதானமாக எடுத்துச் சொல்லி, “இறந்துபோன குரு, தங்களைப் பரிந்துரைத்தார். தூய இறை வழிமுறைப்படி வாழ்பவர் நீங்கள் என்று குறிப்பிட்டார். மறுக்காமல் என்னைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
“சரி வா,” என்று அரவணைத்துக் கொண்டார் அவர். இவரும் இறந்து போன முன்னவவரைப் போலவே பக்தியிலும் ஒழுக்கத்திலும் சிறப்பானவர். இறை வழிபாடும் இறை பாடமும் பயில ஆரம்பித்தார் ஸல்மான். இறை விதி - இதுவும் நீண்ட காலம் தொடரவில்லை. இந்தப் பாதிரியும் வாழ்வின் கடைசித் தருணத்தை அடைந்தார்.
மரணப் படுக்கையில் இருந்தவரிடம், “உங்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த நேரம் வந்துவிட்டது. என் கதையை அறிந்தவர் தாங்கள். அடுத்து நான் யாரிடம் செல்வது என்று தயவு செய்து பரிந்துரையுங்கள்,” என்று கவலையுடன் நின்றார் ஸல்மான்.
“மகனே! எனக்குத் தெரிந்து எங்களைப்போல் வாழ்பவர் ஒருவர்தான் இருக்கிறார். நுஸைபீன் என்ற ஊரில் வசிக்கிறார் அவர்,” என்று சொல்லிவிட்டு இறந்துபோனார் மோஸுல் மதகுரு. அவரை நல்லடக்கம் செய்துவிட்டு, மூட்டையைக் கட்டிக்கொண்டு நுஸைபீனை நோக்கிக் கிளம்பினார் ஸல்மான்.
இறைஞானத் தேடல் தொடர்ந்தது.
அரபியில் நுஸைபீன் என்றும் அராமிக்கில் நிஸீபீஸ் என்றும் அழைக்கப்படும் நகர் துருக்கியில் உள்ளது. மோஸுல் நகரிலிருந்து சுமார் இருநூறு கி.மீ. தூரம். அங்கு வந்து சேர்ந்தார் ஸல்மான். தாம் தேடி வந்த மதகுருவைக் கண்டுபிடித்து, தம்மைப் பற்றி முழுக்கதையையும் சொன்னார். மோஸுலில் இருந்த பாதிரி இவரைப் பரிந்துரைத்ததைப் பற்றிச் சொல்லி, “என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.
அன்பாய் ஸல்மானைச் சேர்த்துக் கொண்டார் அவரும். முந்தைய இருவரைப் போல், தூய இறை பக்தியிலும் வழிபாட்டிலும் இவரும் மிகச் சிறந்தவர். ஸல்மானுக்கும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் -
ஸல்மான்தாம் இளையவரே தவிர அவர் தேடி அடைந்த கிறித்தவப் பாதிரிகள் அனைவரும் மிகவும் வயது முதிர்ந்தவர்கள். சில காலம் கழிந்ததும் இந்தப் பாதிரியும் மரணப் படுக்கையில் விழுந்தார். மனந்தளரா ஸல்மான் அடுத்து இவரிடமும் தம்முடைய வழக்கமான கேள்வியைக் கேட்டார்.
“எனக்குத் தெரிந்து தூய இறைவழிபாட்டில் வாழ்பவர் ஒருவர்தான் இருக்கிறார். அவர் இருப்பது ரோமாபுரியில் உள்ள அம்மூரியா என்ற ஊரில்." இறந்து போனார் பாதிரி.
இறைஞானத் தேடல் தொடர்ந்தது.
அம்மூரியா வந்து சேர்ந்த ஸல்மான், பாதிரியைச் சந்தித்தார். இவரிடமும் துவக்கத்திலிருந்து தம் கதையைச் சொன்னார். சேர்த்துக் கொண்டார் பாதிரி. இந்தப் பாதிரியும் முந்தைய மூவரைப்போல் பக்தி சிரத்தையாய், இறை மார்க்கத்தைத் தூய வடிவில் பின்பற்றுபவராய் இருந்தார். ஸல்மானின் இறைக் கல்வியும் இறை வழிபாடும் தொடர்ந்தன. இம்முறை கூடவே மற்றொரு பணியும் செய்தார் ஸல்மான. கிடைத்த அவகாசத்தில் சிறு தொழில் புரிந்து, பணம் ஈட்ட, அதில் ஓரளவு பணசெல்வமும் அதைக்கொண்டு சில கால்நடைகளும் அவருக்குச் சேர்ந்தன. முந்தையவர்களைப் போலவே இந்தப் பாதிரியும் இருந்தார் என்று பார்த்தோமல்லவா? அவர்களைப் போலவே இவரும் முதியவர். சில காலம் கடந்ததும் இவரையும் கடைசித் தருணம் நெருங்கியது.
அடுத்து என்ன?
தமது வழக்கமான கேள்வியை அவரிடம் முன்வைத்தார் ஸல்மான். ஆனால் இம்முறை இந்தப் பாதிரியின் பதில் வழக்கம்போல் துவங்கி வித்தியாசமாய் முடிந்தது.
அது?
அம்மூரியாவைச் சேர்ந்த பாதிரியை கடைசித் தருணம் நெருங்கியதும் தமது வழக்கமான கேள்வியை அவரிடம் முன்வைத்தார் ஸல்மான். ஆனால் இம்முறை இந்தப் பாதிரியின் பதில் வழக்கம்போல் துவங்கி வித்தியாசமாய் முடிந்தது.

“மகனே! நீ இதுவரை சேர்ந்து பயின்ற எங்களைப் போன்ற பாதிரிகள் இக்காலத்தில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரபுகள் மத்தியில் அவர்களிலிருந்து ஒருவர் இறைத் தூதராக தோன்றப்போகும் காலம் நெருங்கிவிட்டது. நபி இப்ராஹீமின் மார்க்கத்தை மீளெழுச்சி பெறச் செய்வார் அவர். சில அடையாளங்களின் மூலம் அவரை நீ அறிந்து கொள்ளலாம்.”

உன்னிப்பாய் ஸல்மான் கேட்டுக் கொண்டிருந்தார். தோன்றப்போகும் இறுதி நபி குறித்து மூன்று அடையாளங்களை அறிவித்தார் பாதிரி.

“தாம் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து அவர் வாழப்போகும் ஊர், இரு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள பேரீச்ச மரத் தோட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுவதிலிருந்து மட்டுமே அந்த நபி உண்பார்; தானமாக ஏதேனும் அளிக்கப்பட்டால் அதை உண்ண மாட்டார். அவரது இரு தோள்பட்டைகளுக்கு இடையே இறுதி நபித்துவத்தின் அடையாளமாய் முத்திரை ஒன்று இருக்கும். முடிந்தால் அந்த இடத்துக்குச் சென்று அவருடன் இணைந்துகொள்." உயிர்துறந்தார் பாதிரி.

எந்த ஊர், எந்த நாடு என்று சரியாகத் தெரியாமல் எங்குச் செல்வது; யாரைத் தேடுவது? அம்மூரியாவிலேயே தங்கியிருந்தார் ஸல்மான். ஒருநாள் –

கல்பு குலத்தைச் சேர்ந்த அரபு வணிகர்கள் அம்மூரியாவை அடைந்தனர். "நபி தோன்றப்போவது அரபு குலத்தில்" என்று பாதிரி சொன்னது நினைவுக்குவர, அந்த வணிகர்களை நோக்கி ஓடினார் ஸல்மான்.

“தயவுசெய்து என்னை அரேபியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். என்னிடம் சிறிதளவு பணமும் சில கால்நடைகளும் உள்ளன. அதற்கான கூலியாய் அவை எல்லாவற்றையும் உங்களுக்கு அளித்துவிடுகிறேன்.”

அக்கால கட்டத்தில் சாத்தியப்பட்ட உயர் இறைக் கல்வியைப் பெற்றிருந்தும், ‘போதும் இது' என்று உலக வாழ்க்கையில் முடங்கிவிடாமல் அதுவரை ஈட்டியிருந்த செல்வத்தை மீண்டும் முதலீடாக்கி இறைக் கல்வியைத் தொடர, ஈட்டிய செல்வமனைத்தையும் இழப்பதற்கு ஆயத்தமானார் ஸல்மான்.

ஸல்மான் சொன்னதைக் கேட்ட அரபு வணிகர்கள் அவரைப் பார்த்தார்கள். நாம் போகிற ஊருக்கு, கூடவே ஒட்டிக்கொண்டு வர பணம் தருகிறேன் என்கிறார். நாம் என்ன இவரைத் தலையிலா சுமக்கப் போகிறோம் என்று மகிழ்ந்து போனவர்கள், “தாராளமாய் வரலாம்" என்று அவரை சேர்த்துக் கொண்டனர்.

இறை ஞானத் தேடல் தொடர்ந்தது.

வாதி அல் குர்ரா எனும் ஊரை அடைந்தது பயணக் குழு. இது ஸிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கும் மதீனாவுக்கும் இடையில் அமைந்துள்ள ஊர். ஸல்மானை அதுவரை பொறுப்பாய் அழைத்துவந்த அந்தக் குழுவினர் தீவினை ஒன்று புரிந்தனர். அந்த ஊரில் இருந்த யூதன் ஒருவனுக்கு ஸல்மானை அடிமையாய் விற்றுவிட்டு அந்தக் காசையும் வாங்கி பையில் செருகிக் கொண்டு ஒட்டகம் ஏறி, போயே போய்விட்டார்கள். சடுதியில் விதி மாறிப்போனது. பாரசீகச் செல்வந்தருக்குப் பிறந்து, ஏகப்பட்ட வசதியில் வாழ்ந்து, கல்வியின் பொருட்டு ஊர் ஊராய்த் திரிந்த ஸல்மான், அவர் அறிந்திராத ஏதோ ஓர் ஊரில் அடிமையாய் ஆகிப்போனார்.

வாதி அல் குர்ராவில் நிறைய பேரீச்ச மரங்கள் இருந்தன. ‘நபி வந்து சேரப்போகும் ஊர் இதுதான் போலிருக்கிறது' என்று தமக்கு ஏற்பட்ட சோகத்தை மீறி எதிர்பார்ப்பு உருவானது ஸல்மானுக்கு. அந்த அவலத்திலும் அறிவுத் தாகத்துடன் காத்திருந்தார்.

அக்காலத்தில் அடிமை என்றானபின் எசமானனின் கட்டளைக்கு அடிபணிந்து பணிபுரிவதைத் தவிர, வேறொன்றும் செய்ய முடியாது. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றுதான் காலத்தை ஓட்டியாக வேண்டும். இப்படியான ஒருநாளில் அந்த யூத எசமானின் உறவினன் ஒருவன் வந்து சேர்ந்தான். அவன் நமக்கு நன்கு பரிச்சயமான கோத்திரத்தைச் சேர்ந்தவன். பனூ குரைளா கோத்திரம். ஆம், அன்றைய யத்ரிப் நகரில் வசித்து வந்த பனூ குரைளாவேதான். ஊருக்குத் திரும்பும்போது பரிசுப்பொருள் வாங்கிச் செல்வதுபோல் தன் உறவினனிடம் ஸல்மானை விலை பேசி வாங்கிக்கொண்டு, “வா போகலாம்" என்று அழைத்துக்கொண்டு கிளம்பினான். புதிய எசமானனுடன் புறப்பட்டார் ஸல்மான்.

அலுத்துக் களைத்து யத்ரிபை அடையும் வேளையில் சட்டென கண்கள் விரிந்தன ஸல்மானுக்கு. இரண்டு மலைகள்; அதனிடையே பேரீச்சத் தோட்டங்கள் நிறைந்து நின்ற யத்ரிபைக் கண்டதும் அம்மூரியாவில் இறந்துபோன பாதிரி சொன்னது இதுதான் என்று திடமான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. புது ஊரில் அடிமைப் பணி துவங்கியது.

அந்த காலகட்டத்தில்தான் அரேபிய தீபகற்பத்தின் மற்றொரு பகுதியில் உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. இஸ்லாமிய மீளெழுச்சி ஏற்பட்டு, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரச்சாரம் துவங்கி, புதிய தோழர்கள், நிறைய எதிர்ப்பு, ஏகப்பட்ட அட்டூழியம் என்று பரபரப்பாகியிருந்தது மக்கா. அரசல் புரசலாய் யத்ரிப்வரை இச்செய்திகள் வந்தடைந்திருந்தாலும் அவற்றைப் பற்றி எவ்வித விபரமும் தெரியாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று கிடந்தார் ஸல்மான். கடுமையான வேலைகளைச் சுமத்தி யூதன் அவரைப் போட்டு பிழிந்து கொண்டிருக்க, தம் எசமானன் வீட்டைத் தாண்டி வெளி உலகம் அறியாமல் கிடந்தார் அவர்.

அப்படியான ஒருநாளில்தான் -

தனது பண்ணையில் பேரீச்ச மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் ஸல்மானின் யூத எசமானன். அவனை நோக்கி வேகவேகமாக வந்தான் அவனுடைய உறவினன். முகத்தில் பரபரப்பு, கோபம்.

“அல்லாஹ், பனூ ஃகைலா கோத்திரத்தினரை அழிப்பானாக. மக்காவிலிருந்து யாரோ ஒருவர் புலம்பெயர்ந்து வந்திருக்கிறாராம்; தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்கிறாராம்; குபாவில் தங்கியிருக்கிறாராம். இவர்களும் புத்திகெட்டு அவரை வரவேற்க அங்கு குழுமியிருக்கிறார்கள்.”

அப்பொழுது அந்த மரத்தின் மேலே மராமத்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார் அமர்ந்திருந்த யூதனின் அடிமை ஸல்மான். வந்தவன் சொன்ன செய்தி அவர் காதிலும் தெளிவாய் விழுந்தது. அடுத்த நொடி அவரது உடம்பெல்லாம் சூடாகி நடுங்க ஆரம்பித்துவிட்டது. உவமையெல்லாம் இல்லை. மெய் நடுக்கம். நடுங்கிய நடுக்கத்தில் எங்கே ‘தொப்’பென்று தாம் தம் எசமானன் தலையிலேயே விழுந்துவிடுவோமா என்று பயந்துபோய், சமாளித்துக்கொண்டு அவசர அவசரமாக மரத்திலிருந்து இறங்கிவிட்டார் அவர். செய்தியின் தாக்கமும் ஆச்சரியமும் மகிழ்வும் கலந்துபோய் அதை மீண்டும் ஊர்ஜிதம் செய்துகொள்ள வந்தவனிடம், “இப்பொழுது நீங்கள் என்ன சொன்னீர்கள்?" என்று கேட்டார்.

‘பொளேர்' என்று அடிமைக்கு அடி விழுந்தது. எசமானன்தான் அடித்தான். அவனைப் பொறுத்தவரை செய்தியே சோகச்செய்தி. இதில் அடிமையின் துடுக்குத்தனம் வேறா?

“என்ன ஆச்சு உனக்கு? திரும்பிப்போய் ஒழுங்கு மரியாதையாய் உன் வேலையைப் பார்," என்று கத்தினான்.

தடவிக்கொண்டே, “ஒன்றுமில்லை. ஆவலாய் இருந்தது. அறிந்துகொள்ளவே கேட்டேன்," என்று அங்கிருந்து அகன்றவர், ‘ஆஹா! எத்தனை ஆண்டு காத்திருப்பு இது. இதோ கண்ணுக்கு எட்டும் தொலைவில் நிசம்' என்று மாலை நேரத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.

oOo
மாலை வந்ததும், தாம் சேர்த்து வைத்திருந்த உலர்ந்த பேரீச்சம் பழங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டார் ஸல்மான். நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை விசாரித்து அறிந்து வேகவேகமாய் வந்து சேர்ந்தார். பார்த்தார். கண்ணாரப் பார்த்தார்.

‘இவர்தானா அவர்?' அம்மூரிய்யா பாதிரி சொன்னதைப்போல் தம் ஊரிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கிறார். ”முதல் அடையாளம் சரியே.”

“தங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். தாங்கள் இறைபக்தி நிறைந்தவர்கள் என்று சொன்னார்கள். ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டு ஏழைத் தோழர்களுடன் இங்கு வந்துள்ளதாக அறிந்தேன். என்னிடமுள்ள இந்தப் பழங்களை தங்களுக்கு தானமாக அளிக்க விரும்புகிறேன்; பிறரைவிட தாங்களும் தங்கள் தோழர்களும் இதன் தேவை நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.”

தாம் எடுத்துவந்திருந்த பழங்களை நபியவர்களின்முன் வைத்தார் ஸல்மான். தம் அருகில் இருந்த தோழர்களிடம் “உண்ணுங்கள்" என்று கூறிய நபியவர்கள் அவற்றைத் தொடவில்லை.

தமக்குள் சொல்லிக் கொண்டார் ஸல்மான், ”இரண்டாம் அடையாளத்தின் ஒரு பகுதி சரியே.”

அடுத்து சில நாட்கள் தனக்கு உணவாய் அளிக்கப்பட்ட பேரீச்சம் பழங்களிலிருந்து சிறிது சிறிதாய் சேர்க்க ஆரம்பித்தார். ஒருநாள் மீண்டும் நபியவர்களைச் சென்று சந்தித்தார் ஸல்மான். இதனிடையே நபியவர்களும் குபாவிலிருந்து மதீனா வந்துவிட்டார்கள்.

“சென்ற முறை நான் தானமாய் அளித்ததைத் தாங்கள் உண்ணவில்லை என்பதைக் கவனித்தேன். இதோ இது தங்களுக்கு என்னுடைய அன்பளிப்பு. நான் தங்களை உபசரிக்க விரும்புகிறேன்," என்று பேரீச்சம் பழங்களை அளித்தார் ஸல்மான். அதை ஏற்றுக்கொண்ட நபியவர்கள் தாமும் சிலவற்றைச் சாப்பிட்டு, தம் தோழர்களுக்கும் அளித்தார்கள்.

தமக்குள் சொல்லிக் கொண்டார் ஸல்மான், ”இரண்டாம் அடையாளத்தின் மறு பகுதியும் சரியே.”

சிலகாலம் கழிந்தது. ஒருநாள் தோழர் ஒருவர் இறந்துவிட, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஜன்னத்துல் பகீ மையவாடியில் தோழர்களுடன் வந்திருந்தார்கள் நபியவர்கள். ஸல்மானும் வந்தார். நபியவர்கள் ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள். இடுப்பில் ஓர் ஆடை, மேலே ஓர் ஆடை. நபியவர்களைச் சுற்றிக் கொண்டு பின்னால் சென்றார் ஸல்மான். அம்மூரியா பாதிரி கூறிய மூன்றாம் அடையாளம் தென்படுகிறதா என்று பார்க்க ஆவல்.

தம்மை ஸல்மான் நோட்டமிடுவதைக் கண்ட நபியவர்களுக்கு அவர் தேடுவது என்ன என்று புரிந்துவிட்டது. தமது மேலங்கியை அவர்கள் இலேசாகத் தளர்த்த, முதுகில் இரு தோள்பட்டைகளுக்கு இடையே இறுதி நபித்துவத்தின் அடையாளமான மச்சத்தைக் கண்டார் ஸல்மான். இம்முறை தமக்குள் பேசிக்கொண்டிருக்கவில்லை. நபியவர்களை அண்மி, விம்ம ஆரம்பித்து, அப்படியே சரிந்தார். உடனே அவரைத் தூக்கினார்கள் நபியவர்கள்.

“என்ன ஆயிற்று உனக்கு?" என்று விசாரித்தார்கள்.

சொன்னார். ஆரம்பித்திலிருந்து துவங்கி, இறை கல்வியைத் தேடித்தேடி தான் அலைந்த தன் வாழ்க்கைப் பயணத்தை முழுவதுமாகச் சொன்னார். தம் தோழர்களை அழைத்து அவர்களிடமும் அதைச் சொல்லச் சொன்னார்கள் நபியவர்கள்.

இஸ்லாத்தினுள் நுழைந்தார் ஸல்மான் அல்-ஃபாரிஸீ.

“நீர் அடிமைத் தளையிலிருந்து விடுதலையடைய வேண்டும் ஸல்மான்" என்று தெரிவித்தார்கள் நபியவர்கள். அக்காலத்தில் அடிமையாய் இருப்பவர் விடுதலையடைவது என்றால், ஒன்று எசமானனாய்ப் பார்த்து விடுவிக்க வேண்டும்; அல்லது எசமானன் விதிக்கும் கிரயத்தை அளிக்க வேண்டும். ஓர் அடிமை, தனது விடுதலைக்கான கிரயம் அளிப்பது அரபு மொழியில் முகாதபா எனப்படும். நபியவர்கள் விடுதலை பற்றித் தெரிவித்ததும் உடனே தம் எசமானனிடம் தனது விடுதலைக்கான கிரயம் என்னவென்று விசாரித்தார் ஸல்மான். இலேசில் அவரை விடுவதாய் இல்லை யூதன். எனவே, ”முந்நூறு பேரீச்சம் மரம், நாற்பது ஊக்கிய்யா தங்கம் கொடுத்துவிட்டால் போதும், உனக்கு விடுதலை" என்றான் அவன். ஓர் அடிமைக்குச் சற்றும் சாத்தியப்படாத மிகப் பெரும் கிரயம். அத்தனை மரத்திற்கும் தங்கத்திற்கும் எங்குச் செல்வது? நபியவர்களிடம் வந்து செய்தியைச் சொன்னார்.

“உங்களின் சகோதரருக்கு உதவுங்கள்," என்று தம் தோழர்களிடம் கூறினார்கள் நபியவர்கள். ஸல்மான ஓர் அடிமை; வெளிநாட்டுக்காரர். அவரை, ‘உங்களின் சகோதரர். அவருக்கு உதவுங்கள்' என்று நபியவர்கள் கூறியதும் உடனே காரியத்தில் இறங்கினார்கள் தோழர்கள். ஒருவர் முப்பது பேரீச்சங் கன்றுகளை அன்பளிப்பாய் அளித்தார். மற்றொருவர் இருபது; இன்னொருவர் பதினைந்து என்று ஆளாளுக்கு தங்களால் இயன்ற உதவியைச் செய்ய - சிறிது சிறிதாக முந்நூறு கன்றுகள் சேர்ந்துவிட்டன.

சகோதரனுக்கு உதவியென்றால் வரிந்துகட்டித் தோள் கொடுத்திருக்கிறார்கள் தோழர்கள். நாடு, இனம், நிறம், மொழி, அந்தஸ்து, குலம், கோத்திரம், உயர்வு, தாழ்வு போன்ற வேற்றுமைகளில் மூழ்கிக் கிடந்தவர்கள்,  இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை ஏற்றதன்பின் பழைய பண்புகளுக்கு நேர்மாறாய் ஆகிப்போனார்கள். ஒற்றைக் கலிமா நெஞ்சில் ஊடுருவிப் புகுந்து நிகழ்த்திய நிஜ அதிசயம் அது.

“நிலத்தில் குழிதோண்டி கன்றுகளை நடுவதற்குத் தயார் செய்துவிட்டு என்னிடம் வந்து சொல். நானே என் கையால் இவற்றை நடுவேன்" என்றார்கள் நபியவர்கள். தோழர்களின் உதவியுடன் கிடுகிடுவென்று முந்நூறு குழிகள் தயாராயின. நபியவர்களிடம் சென்று சொல்ல, தாமே தம் கையால் அனைத்து மரக் கன்றுகளையும் நட்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

இந்நிகழ்வுகளை பின்னர் ஒருகாலத்தில் விவரித்த ஸல்மான், ஆச்சரியமுடன் அறிவித்த செய்தி பதிவாகியுள்ளது: “அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். அந்த முந்நூறு மரக்கன்றுகளில் ஒன்றுகூட பட்டுப் போகவில்லை. அனைத்தும் செழித்தோங்கி வளர்ந்தன.”

அவற்றை தமது விடுதலைக்கான முதல் பகுதியாக எசமானனிடம் அளித்தார் ஸல்மான். அடுத்து தங்கம்?

ஒருநாள் நபியவர்களிடம் முட்டை அளவிற்கான தங்கத்தை யாரோ அளித்தார்கள். உடனே நபியவர்கள் விசாரித்தது, “ஸல்மானின் விடுதலை என்னவானது?" பெற்ற பிள்ளைகளைப்போல் தம் தோழர்கள்மீது அன்பும் பாசமும் கரிசனமும் கொண்டிருந்தவர் அந்த மாமனிதர். வரவழைக்கப்பட்டார் ஸல்மான். தங்கத்தை அளித்தார்கள் நபியவர்கள்.

“நாற்பது உக்கியா அளவிற்கான தங்கத்தைக் கேட்டிருக்கிறான் எசமானன். இது சிறிய அளவாக இருக்கிறதே, எப்படி சரிவரும்?" என்று கவலைப்பட்டார் ஸல்மான். அதை நபியவர்களிடமே தெரிவித்தும் விட்டார்.

“எடுத்துச் செல் ஸல்மான். அல்லாஹ் இதை உனக்குப் போதுமானதாக ஆக்கிவைப்பான்" என்ற உறுதியான பதில் நபியவர்களிடமிருந்து வந்தது.

நேரே எசமானனிடம் வந்தார். ‘இந்தா நீ கேட்ட தங்கம்' என்று அளித்தார். அளவிட்டுப் பார்த்தான் யூதன். சரியாக நாற்பது உக்கிய்யா அளவு இருந்தது அது. ”உனக்கு என்னிடமிருந்து விடுதலை; போகலாம் நீ" என்று அனுமதித்தான் அவன். விடுதலைக் காற்றை நீட்டி இழுத்து சுவாசித்தார் ஸல்மான் அல் ஃபாரிஸீ, ரலியல்லாஹு அன்ஹு.

எத்தனை ஆண்டு? எத்தனை பயணம்? எத்தகு அலைச்சல்? வேட்கையுடன் அவர் தேடித்தேடி அலைந்த பயணம் முடிவுக்கு வந்தது. இப்பொழுது யாதொரு தடையுமின்றி முழுவீச்சில் துவங்கியது அவரது இஸ்லாமியக் கல்வி – உலகின் தலைசிறந்த ஆசிரியரிடமிருந்து.

பிற்காலத்தில் ஒருமுறை அலீ ரலியல்லாஹு அன்ஹுவிடம், “நபித் தோழர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்" என்று ஆர்வமுடன் கேட்டார்கள் மக்கள் சிலர். சில தோழர்களைப் பற்றியும் அவர்களது முக்கியமான சிறப்புத் தகுதிகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தார் அலீ.

“ஸல்மானைப் பற்றி தெரிவியுங்கள்" என்றார்கள்.

“அவரா? கடலளவு ஞானம் கொண்டவர். அவரது ஞானத்தின் ஆழம் அளவிட முடியாதது. அவர் அஹ்லுல்பைத் - எங்களைச் சேர்ந்தவர்" என்றார் அலீ. 'கடலளவு ஞானம்' சரி. பாரசீக நாட்டு முன்னாள் அடிமை ஸல்மான், நபியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரா?

எப்படி?

அவரா? கடலளவு ஞானம் கொண்டவர். அவரது ஞானத்தின் ஆழம் அளவிட முடியாதது. அவர் அஹ்லுல்பைத் - எங்களைச் சேர்ந்தவர்" என்று அலீ (ரலி) ஸல்மானைப் பற்றி கூறியதற்குக் காரணம் இருந்தது. அந்த விபரம் அறிய அகழிவரை செல்லவேண்டும்.

அகழிப் போர் என்று பெயர் பெற்றுவிட்ட கூட்டணிப் படையினருக்கு எதிரான முஸ்லிம்களின் போரில், அகழிக்குக் காரணம் ஸல்மான் ரலியல்லாஹு அன்ஹு. மதீனாவை நோக்கித் திரண்டு வரும் எதிரிகளின் கூட்டணியை எப்படி எதிர்கொள்வது, மதீனாவை எப்படித் தற்காப்பது என்று தம் தோழர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்கள் நபியவர்கள். மிகவும் இக்கட்டான சூழ்நிலை அது. அப்பொழுதுதான் அரபியர்கள் அறிந்திராத அந்தப் புது யுக்தியை முன்மொழிந்தார் ஸல்மான் அல் ஃபாரிஸீ. பாரசீகர்களின் தற்காப்புப் போர் முறை அது. அந்நாட்டைச் சேர்ந்த ஸல்மான் அதை நன்றாக அறிந்திருந்தார். பரந்த நிலப்பரப்பில் போரிட்டுப் பழகியிருந்த அரபியர்களுக்கோ இந்தத் திட்டம் புதியது. அதன் பலனும், தற்காப்பு அம்சமும் அவர்களுக்கு உடனே பிடித்துப் போயின. தவிர மதீனா நகரின் அமைப்பும் அதற்கு உகந்ததாய் இருந்தது மற்றொரு காரணம்.

மதீனாவின் கிழக்குப் பகுதியில் வகீம் எனும் எரிமலைக் குன்று வெகு தூரத்திற்கு நீண்டிருந்தது. மேற்கே அதேபோல் மற்றொரு எரிமலை வபரா. தெற்கே வெகு அடர்த்தியான பேரீச்சைத் தோட்டங்கள். தோட்டங்களைத் தாண்டி பனூ குரைளா யூதர்களின் குடியிருப்புகள். அவற்றிற்கு கோட்டைச் சுவர் அரண். பனூ குரைளா யூதர்கள் அச்சமயத்தில் முஸ்லிம்களுடன் நல்லிணக்க உடன்படிக்கை செய்திருந்தனர். (அதைத்தான் பின்னர் இப்போரின் முக்கிய தருணத்தில் அவர்கள் காற்றில் பறக்கவிட்டனர்.) இவ்விதம் மூன்று திசையிலும் இயற்கை அரண் அமைந்திருந்தது மதீனாவுக்கு.

ஆக, வடக்குப் பகுதியிலிருந்து மட்டுமே எதிரிகள் உள்ளே நுழைய முடியும் என்பதால் அங்கு அகழி தோண்டும் வேலை உடனே ஆரம்பமாகியது. 3000 தோழர்கள் இப்பணியில் இறங்க, அவர்களைப் பத்துப் பேர் கொண்ட குழுவாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் 40 கெஜம் தோண்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் நபியவர்கள். இராப் பகலாக போர்க்கால நடவடிக்கை தொடர, மளமளவென்று உருவானது அகழி.

பணியைப் பகிர்ந்தளிக்க இவ்விதம் குழு பிரிக்கும் போதுதான், மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த முஹாஜிர்கள் கூறினார்கள், “ஸல்மான் எங்களவர்.”

மதீனத்து அன்ஸார்கள் போட்டியிட்டார்கள், “இல்லை, இல்லை. அவர் எங்களவர். எங்களது அணியில் இருப்பார் அவர்.”

இவற்றைச் செவியுற்ற நபியவர்கள் அந்தப் பாசப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்: “ஸல்மான் முஹம்மதின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.”

சிறப்பான முற்றுப்புள்ளி. எத்தகைய பெரும்பேறு இது? உலகில் எத்தகு உன்னதம் இது? இதைத்தான் அலீ (ரலி) மறக்காமல் குறிப்பிட்டார். ஸல்மான் பெற்ற பெருமை அது மட்டுமன்று. மற்றொருமுறை -

அவன்தான் கல்வி அறிவில்லாத (அரபு) மக்களிலிருந்து ஒருவரைத் தன் தூதராகத் தேர்ந்தான். அம்மக்கள் வெளிப்படையான வழிகேட்டில் உழன்றிருந்தனர். இத்தூதர், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் கற்பித்து, அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்கு வேதத்தோடு ஞானத்தையும் கற்பிக்கிறார். (இவருடன் சேர்ந்திருக்கும் இவரது சமகாலத்தவர்க்கும்), இவர்களுடன் சேராத(பிற்காலத்த)வர்களுக்காகவும், (இவரைத் தூதராக அல்லாஹ்) அனுப்பி வைத்தான். அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்” என்று வசனம் ஒன்றை அருளினான் அல்லாஹ். சூரத்துல் ஜுமுஆவின் 2 & 3ஆவது வசனங்கள் அவை. அவை நபியவர்களுக்கு அருளப்பட்ட நேரத்தில் அவர்கள் அருகில் அபூஹுரைரா, ஸல்மான் அல் ஃபாரிஸீ மற்றும் சில தோழர்கள் அமர்ந்திருந்தனர்.

”அல்லாஹ்வின் தூதரே! இவர்களுடன் சேராதவர்களுக்காகவும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறானே அவர்கள் யாவர்?” என்று கேட்டார் அபூஹுரைரா. சற்று நேரம் அமைதியாக இருந்த நபியவர்கள், தொடர்ந்து மூன்றாவது முறையாக அபூஹுரைரா கேட்டதும் விளக்கம் அளித்தார்கள்.

தம் கையை ஸல்மான் மீது போட்டு, “ஈமானிய அறிவு என்பது அத்-துரைய்யாவில் இருந்தாலும் இவரது மக்கள் - அதாவது பாரசீகர்கள் - அதைத் தேடிப் பெறுவார்கள்” என்று விளக்கமளித்தார்கள் நபியவர்கள். அத்-துரைய்யா என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர். ஞானம் என்பது எட்டாத தொலைவில் இருந்தாலும் அதைத் தேடிப் பெறுவார்கள் பாரசீகர்கள் என்ற உவமைக்கு ஸல்மான் அல் ஃபாரிஸீ சாட்சியாக அமர்ந்திருந்தார் அங்கு.
oOo

மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனத்து அன்ஸாரிகளுக்கும் இடையே சகோதர உறவை ஏற்படுத்தியிருந்தார்கள் நபியவர்கள் என்று முந்தைய அத்தியாயங்கில் பார்த்தோமில்லையா? அதன்படி அடிமைத் தளையிலிருந்து விடுதலையடைந்த ஸல்மானுக்கும் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹுவுக்கும் இடையே சகோதர உறவு ஏற்பட்டுப் போயிருந்தது. ஒருநாள் அபூதர்தாவைச் சந்திக்க வந்தார் ஸல்மான். அங்கு அபூதர்தாவின் மனைவி ஆடை-அலங்காரங்களில் சிரத்தை எடுத்துக் கொள்ளாமல் எளிமையிலும் எளிமையாக இருந்ததைக் கண்டு அவருக்கு ஆச்சரியம். உதுமான் பின் மள்ஊன் வரலாற்றில் அவர் மனைவி ஃகவ்லா பற்றி படித்தது நினைவுக்கு வருகிறதா? ஏறக்குறைய அதே காரணம்தான் இங்கும்.

”ஏன் இப்படி?” என்று கவலையுடன் விசாரித்தார் ஸல்மான்.

“உங்கள் சகோதரர் அபூதர்தா இவ்வுலக சொகுசை விரும்புவதில்லை” என்று பதில் அளித்தார் உம்மு தர்தா. அபூ தர்தாவின் எளிமையையும் ஆன்மீக ஈடுபாட்டையும்தான் நாம் விரிவாகப் பார்த்தோமே!

சற்று நேரத்தில் அங்கு வந்தார் அபூதர்தா. உணவு தயாரானது. அதை அக்கறையாய் சகோதரர் ஸல்மானுக்கு பரிமாறிவிட்டு அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் அபூதர்தா. தாம் மட்டும் உண்ணவில்லை! இருவருக்கும் போதுமான உணவு இல்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கவேண்டும் ஸல்மானுக்கு. இருப்பது ஒற்றை பேரீச்சம்பழம் என்றாலும் அதைப் பிய்த்து பகிர்ந்து உண்பவர்கள் அவர்கள். எனும்போது தாம் மட்டும் எப்படி தனியாய் சாப்பிடுவார்? “நீங்களும் என்னுடன் சேர்ந்து உண்ணுங்கள்” என்றார் ஸல்மான்.

“இல்லை நீங்கள் உண்ணுங்கள். நான் இன்று நோன்பு நோற்றுள்ளேன்” என்று வேறுவழியில்லாமல் காரணத்தைக் கூறினார் அபூதர்தா. கடமையல்லாத உபரி நோன்பு அது.

“நீங்கள் என்னுடன் உண்ணாவிட்டால் நானும் உண்ணப்போவதில்லை.”

ஸல்மானின் திட்டவட்டமான பதிலால் விருந்தோம்பலுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய கட்டாயம் அபூதர்தாவுக்கு ஏற்பட்டுப்போனது. தமது நோன்பை முறித்துக்கொண்டு ஸல்மானுடன் உணவு உட்கொண்டார். உண்டார்கள்; பருகினார்கள்; அளவளாவினார்கள். இரவு வந்தது. அன்று தம் சகோதரர் வீட்டிலேயே தங்கினார் ஸல்மான். உறங்கச் சென்றார்கள்.

இரவின் சிறு பகுதி கழிந்தது. அபூதர்தா எழுந்து இரவில் தொழும் உபரித் தொழுகைக்குத் தயாரானார். அதைக் கண்ட ஸல்மான், “உறங்குங்கள் அபூதர்தா” என்று தடுத்துவிட்டார்! மேலும் சிறு பகுதி கழிந்தது. ‘சரி இப்பொழுதாவது தொழலாம்’ என்று எழுந்தார் அபூதர்தா. மீண்டும் அவரைத் தடுத்து உறங்க வைத்தார் ஸல்மான்! ஏறக்குறைய இரவின் கடைச்சாம நேரம். இப்பொழுது ஸல்மான் அபூதர்தாவை எழுப்பினார்.

இருவரும் தொழுதனர். தொழுது முடித்தபின், “உம் இறைவனுக்கு உம் மீது உரிமையுண்டு; உமது ஆன்மாவுக்கு உம் மீது உரிமையுண்டு; உம் குடும்பத்தினருக்கு உம் மீது உரிமையுண்டு. எனவே அவரவர் உரிமையை முறைப்படி நிறைவேற்றுங்கள் அபூதர்தா” என்று உபதேசம் புரிந்தார் ஸல்மான். அதன்பின் நபியவர்களைச் சந்தித்த அபூதர்தா, நடந்தவற்றை விவரித்து விளக்கம் கேட்க, “ஸல்மான உண்மையுரைத்தார்” என்றார்கள் நபியவர்கள்.

இவ்வாறு ஆழ்ந்த இறை ஞானத்துடன் விளங்கிய ஸல்மான் அல் ஃபாரிஸீக்கு வீரம் உபரிப் பாடமாய் ஆகிவிடவில்லை. இறைவழியில் அறப்போர் என்பது எத்தகைய கட்டாயக் கடமை என்பதை அவரும் தோழர்களும் மிகத் தெளிவாய் அறிந்திருந்தனர். அதற்கான தருணங்களிலெல்லாம் களத்தில் வீர பவனி வந்திருக்கின்றனர். ஆனால், வாழ்வோ, சாவோ, அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற உயர்வான நிலையும் பக்குவமும் மனத்தில் ஆழப் பதிந்து அவர்களது இயல்பாகவே ஆகிவிட்டதால் எந்த நிலையிலும் அவர்களது பணிவும் அடக்கமும் மட்டும் அவர்களைவிட்டு விலகவில்லை. பகட்டாரவாரம், செருக்கு என்ற வார்த்தைகள் எல்லாம் அவர்கள் மத்தியில் மறைந்தே போய்விட்டன.

உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக இருந்தபொழுது பாரசீகத்தின் மதாயின் நகரை ஸஅத் பின் அபீவக்காஸ் தலைமையில் முஸ்லிம்கள் படை தாக்கியது. மன்னன் குஸ்ரோ மதாயின் நகரைப் பாரசீகத்தின் தலைநகராய் அமைத்திருந்தான். எனவே அது அவர்களுக்கு மிக முக்கிய நகரம்.

பாரசீகர்களுக்கு எதிராய் நிகழ்ந்த பல யுத்தங்களில் கலந்துகொண்டு, போர் நடைபெறும் முன் அந்தப் பாரசீகர்களை இஸ்லாத்தை நோக்கி அழைப்பது ஸல்மான் அல்-ஃபாரிஸீயின் முக்கியப்பணியாய் இருந்திருக்கிறது. கிந்தா எனும் ஊரிலிருந்து கிளம்பிய முஸ்லிம்களின் படையில் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார் ஸல்மான். தளபதி என்றதும் நமது மனக்கண்ணில் ஒரு பிம்பம் ஓடுமே அத்தகைய படோடபம் எதுவும் இல்லை. ஒரு சாதாரண போர்வீரருடன் அவரது கோவேறு கழுதையில் ‘எனக்கும் இடம்கொடேன்’ என்பதுபோல் ஏறி அமர்ந்து கொண்டார். அப்படி அமர்ந்து பயணித்து மதாயின் நகரை அடைந்தார் தளபதி. அவரது கையிலிருந்த கொடியை ”நாங்கள் ஏந்திக்கொள்கிறோம் தாருங்கள்” என்று மற்றவர்கள் கேட்டபோதும் தரவில்லை ஸல்மான். எந்த சிறு பொறுப்பும் பெரும் பொறுப்பு அவருக்கு. தாமேதாம் அதை ஏந்தியிருந்தார்.

கடுமையான போர் நடைபெற்று இறுதியில் மதாயின் நகரை முஸ்லிம்கள் வெற்றிகரமாய்க் கைப்பற்றினர். பிறகு திரும்பும்பொழுதும் வெற்றிக்களிப்பு, மமதை எதுவும் இன்றி, அதே வீரருடன் அதேபோல் கழுதையில் தொடர்ந்தது அவரது பயணம். இத்தகு தோழர்களை என்ன செய்வார் உமர்?

மதாயின் நகரின் ஆளுநர் பதவியை ஸல்மான் அல் ஃபாரிஸீக்கு அளித்தே தீருவது என்று உமர் அவர் பின்னால் நிற்க ஆரம்பித்தார். மாட்டவே மாட்டேன் என்று அடம்பிடித்தார் ஸல்மான். “இருவருக்குத் தலைவனாக இருப்பதா, மண்ணைத் தின்று வாழ்வதா என்று என்னிடம் கேட்டால் மண்ணைத் தின்று வாழ்வதே மேல் என்று சொல்வேன்” என்று பதவியை வெறுத்து மறுத்து ஓடியிருக்கிறார். ஆனால் ‘உன்னைப் போன்றவர்களே மக்களை ஆள்வதற்கு சகல அருகதையும் உள்ளவர்கள்’ என்று உமர் ஒரு கட்டத்தில் அவரை மடக்கிவிட்டார். கடமையைச் செய்ய வேண்டும் எனும் ஒரே காரணத்துக்காக, உலக இச்சை, பதவி ஆசை என்பதெல்லாம் எதுவுமே இன்றி பதவியை ஏற்றார் ஸல்மான் அல் ஃபாரிஸீ.

முப்பதாயிரம் குடிமக்களுக்கு ஆளுநர் என்ற பதவி அவரை அடைந்தது. ஆண்டுக்கு ஐயாயிரம் திர்ஹம் ஊதியம்; தவிர, முதல் இரு கலீஃபாக்களின் ஆட்சியின்போது இஸ்லாமிய ஆட்சி விரிவடைந்து, செல்வம் பெருக ஆரம்பித்தபோது, அவற்றையெல்லாம் மக்களுக்குப் பங்கிட்டு அளித்தவகையில் அவரது பங்காக கிடைத்த தொகை ஆண்டுக்கு நாலாயிரத்திலிருந்து ஆறாயிரம் திர்ஹம். இவ்வாறு கைநிறைய செல்வம் அவரை அடைந்தது.

பாரசீகத்தின் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்து, தம் இள வயதில் அனைத்து சொகுசும் அனுபவித்து வாழ்ந்து, அறிவுத் தேடல் என்று சுற்றிச் சுற்றி அனைத்தையும் இழந்து, அடிமையாய்க் கிடந்து, இன்னலே வாழ்க்கையாய் வாழ்ந்தவருக்கு இறுதியில் செல்வம் அவரது வாசலில் வந்து கொட்ட, அவர் செய்த முதல் காரியம் என்ன? பெரும் விந்தை! தமக்கென கிடைத்த ஆயிரக்கணக்கான திர்ஹத்தை அப்படியே முழுக்க முழுக்க அள்ளி ஏழைகளுக்குத் தந்துவிட்டார். தனக்கென அவர் வைத்திருந்தது? ஓர் ஆடை; பயணம் செய்ய ஒரு கழுதை. ஆச்சா! உணவு என உண்டது பார்லி ரொட்டி. அவ்வளவுதான். அவ்வளவேதான்.

அப்படியானால் குடும்பத்தைக் காப்பாற்ற என்ன செய்தார் என்று கேள்வி எழுமல்லவா. அது மேலும் விந்தை! கூடை பின்னி விற்று அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தியிருக்கிறார் ஆளுநர். ஈச்ச ஓலைகளை ஒரு திர்ஹத்திற்கு வாங்கி அதைப் பின்னி மூன்று திர்ஹத்திற்கு விற்பனை. அதில் ஒரு திர்ஹம் மீண்டும் ஓலை வாங்க முதலீடு. ஒரு திர்ஹம் குடும்பத்தைப் பராமரிக்க. மீதம் ஒரு திர்ஹம்? அதுவும் தானம்.

“நான் இப்படி வாழ்வதை உமர் கத்தாப் தடுத்தாலும் கேட்க மாட்டேன்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு வாழ்ந்திருக்கிறார். ரலியல்லாஹு அன்ஹு.

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்பது நமக்கு வேண்டுமானால் நியதியாக இருக்கலாம். அவரோ அனைத்தையும் தானமளித்துவிட்டு மீதமிருந்ததில் வாழ்க்கையை கழித்திருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கை என்று இல்லாமல் அவரது பொது வாழ்க்கையும் விலக்கின்றியே இருந்திருக்கிறது.

ஒருநாள் ஸல்மான் சாலையில் நடந்து சென்றபோது ஷாம் நாட்டிலிருந்து வந்திருந்த பயணியொருவர் அவரைக் கவனித்தார். பயணியிடம் பேரீச்சம் பழம், அத்திப் பழம் நிரம்பிய சுமை இருந்தது. நெடுந்தூரம் வந்த பயணக் களைப்பில் இருந்த அந்த வழிப்போக்கர் ஸல்மானைப் பார்த்துவிட்டு ‘யாரோ ஓர் ஏழை போலிருக்கிறது’ என்று நினைத்துவிட்டார். இரக்கப்பட்டவர், அவருக்கும் உபகாரம், தனக்கும் உதவி என்று தம் சுமையைத் தூக்கும் கூலியாளாக அவரை உதவிக்கு அழைத்தார். “சரி” என்று ஏற்றுக்கொண்டு, மூட்டையைத் தூக்கி தோளில் சுமந்துகொண்டு நடக்க ஆரம்பித்தார் ஆளுநர்.

வழியில் அவரைச் சந்தித்த மக்கள், “அமீருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார்கள்; சிலர் அவரிடமிருந்து மூட்டையை வாங்கி தாங்கள் சுமக்க ஓடிவந்தார்கள்... அதிர்ந்துவிட்டார் ஷாம் நாட்டுப் பயணி. “எனது மூட்டையைச் சுமக்கும் கூலியாள் மதாயின் நகரின் ஆளுநரா?”

“மிகவும் மன்னியுங்கள்” என்று மூட்டையை வாங்கிக் கொள்ள யத்தனிக்க அதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளவில்லை ஸல்மான்.

”அதெல்லாம் முடியாது. முதலில் நாம் பேசிக் கொண்டபடி நீ சொன்ன இடத்தில்தான் சுமையை இறக்குவேன்,” என்று வேலையை முற்றிலுமாய் செய்து முடித்துவிட்டுத்தான் திரும்பினார். என்ன சொல்வது? இதையெல்லாம் நாம் மீண்டும் மீண்டும் படித்து பெருமூச்சு விடவேண்டியதுதான்.

ஆட்சி அதிகாரத்தில் இச்சை இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். தாம் அதைச் சுமப்பதையே வெறுத்திருக்கிறார் ஸல்மான் அல் ஃபாரிஸீ. ஒருவர் அவரிடம், “நீங்கள் ஏன் ஆட்சிப் பொறுப்பை வெறுக்கிறீர்கள்?” என்று கேட்டபோது,

“அதை அனுபவிப்பதில் உண்டாகும் இனிமையும்; துறப்பதில் நேரிடும் கசப்புணர்வுமே காரணம்” என்று வந்திருக்கிறது பதில். எவ்வளவு எளிய உண்மை? இன்று எந்த ஆட்சியாளர் எந்தத் தலைவர் இதற்கு விலக்கு?

இப்படிப்பட்ட ஆளுநர் ஸல்மான் அல் ஃபாரிஸீ, கலீஃபாவைச் சந்திக்க மதீனா வந்தபோது, ஒரு காரியம் செய்தார் உமர். தம் தோழர்களை அழைத்து, “என்னுடன் வாருங்கள். ஸல்மான் வந்து கொண்டிருக்கிறார். அவரைச் சென்று வரவேற்போம்” என்று மதீனா நகரின் வெளிவாயிலுக்கு வந்து வரவேற்று அழைத்துச் சென்றிருக்கிறார். இறையச்சம், அடக்கம், எளிமை என்று மாய்ந்து மாய்ந்து வாழ்ந்தவர்களைத் தேடித்தேடி வந்துள்ளன பெருமையும், நற்பேறும்.

பதவி வேண்டாம் என்று மறுத்ததும் வெறுத்ததும் சம்பிரதாயமாக இல்லாமல் மீண்டும் மீண்டும் உமருக்குத் தெரிவித்து, ஒரு கட்டத்தில் ஹுதைஃபா இப்னுல் யமான் ரலியல்லாஹு அன்ஹுவை மதாயினுக்கு ஆளுநராக நியமித்து ஸல்மானை விடுவித்தார் உமர்.
oOo

தாரிக் இப்னு ஷிஹாப் என்பவர் ஒருமுறை ஸல்மானைச் சந்தித்தார். உரையாடும்போது அவரிடம் ஸல்மான் சொன்னார். “இரவு சூழ்ந்ததும் மக்கள் மூன்று வகையினர் ஆகிவிடுகின்றனர். முதல்வகையைச் சேர்ந்த மனிதனுக்கு இரவு என்பது சாதகமானதாக ஆகிவிடுகிறது; அவனுக்கு இரவு எதிரியல்ல. அடுத்தவகை மனிதனுக்கு இரவு சாதகமாக அமையாமல் அவனுக்கு எதிரியாகி விடுகிறது. மூன்றாம் வகை மனிதனுக்கோ இரவு அவனுக்குச் சாதகமாகவோ எதிரானதாகவோ அமைவதில்லை.”

தாரிக் இப்னு ஷிஹாபுக்குப் புரியவில்லை. “எப்படி அது?” என்று கேட்டார்.

“முதல் வகை மனிதன் இருக்கிறானே அவன் இரவு தனக்கு அளிக்கும் வாய்ப்பை சரியானவகையில் பயன்படுத்திக் கொள்கிறான். மற்றவர்கள் அக்கறையற்று கிடக்க, இவனோ ஒளுச் செய்கிறான்; இரவுத் தொழுகையை நிறைவேற்றுகிறான். எனவே இரவு இவனுக்குச் சாதகமாகிவிடுகிறது; எதிராக அமைவதில்லை.

“இரண்டாம் வகை மனிதன் அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் தீய செயல்களில் இரவைக் கழிக்கிறான். இவனுக்கு இரவு சாதகமாய் அமையாமல் எதிரியாகிவிடுகிறது.

“மூன்றாம் வகை மனிதன், தூக்கத்தில் இரவைக் கழிக்கிறான். அவனுடைய இரவு அவனுக்குச் சாதகமும் இல்லை, எதிரியும் இல்லை.”

இந்த விளக்கத்தைக் கேட்ட தாரிக்குக்கு அந்த நபித் தோழரின் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டுப்போனது. மேலும் அறிய, பருக ஆசை ஏற்பட்டது. “நான் இவரைப் பின்தொடர்ந்து செல்லப் போகிறேன்” என்று முடிவெடுத்தார். அப்பொழுது அந்த ஊருக்கு முஸ்லிம்களின் படைப்பிரிவு ஒன்று வந்தது. அவர்களுடன் இணைந்து கொண்டார் ஸல்மான்; பின்தொடர்ந்தார் தாரிக். ஓர் இடத்தில் முகாமிட்டார்கள் அவர்கள்.

இரவின் ஒரு பகுதி கழிந்திருக்கும். எழுந்து தொழ தயாரானார் தாரிக். ஸல்மானோ உறங்கிக் கொண்டிருந்தார். ‘என்னைவிட மிகவும் மேன்மை வாய்ந்த நபியவர்களின் தோழரே உறங்குகிறாரே’ என்று தாமும் உறங்கிவிட்டார் தாரிக். இரவின் மற்றொரு பகுதி கழிந்தது. மீண்டும் எழுந்தார் தாரிக். அப்பொழுதும் ஸல்மான் உறங்குவதைக் கண்டார். தானும் உறங்கிவிட்டார். இப்படியே இரவின் பெரும் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தார் ஸல்மான். ஆனால், தூக்கத்தில் புரண்டுபடுக்கும் பொழுதெல்லாம், “ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்துலில்லாஹ் வ லா இலாஹா இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்” என்று அவர் முணுமுணுப்பதைக் கேட்டார் தாரிக். இறுதியாக இரவின் கடைசிப் பகுதியில் எழுந்த ஸல்மான், ஒளு செய்து நான்கு ரக்அத்துகள் தொழுவதைக் கண்டார் தாரிக். அதிகாலை ஃபஜ்ருத் தொழுகை முடிந்ததும் இதை ஸல்மானிடம் விசாரித்தார்.

“அபூஅப்துல்லாஹ்வே! தொழுவதற்கு இரவில் பலமுறை கண்விழித்தேன். ஆனால் அப்பொழுதெல்லாம் தாங்கள் உறங்கிக் கொண்டிருந்தீர்களே!”

“என் சகோதரன் மகனே! அப்பொழுது நான் ஏதும் முணுமுணுப்பதைக் கேட்டாயோ?”

”ஆம்” என்று தாம் செவியுற்றதைச் சொன்னார் தாரிக்.

“அதுவும் தொழுகையே” என்றவர் மேலும் சொன்னார். “கடமையாக்கப்பட்டுள்ள ஐவேளைத் தொழுகைகள் அவற்றுக்கு இடையே நிகழும் பிழைகளுக்குப் பரிகாரமாய் அமைந்து விடுகின்றன - கொலைக் குற்றத்தைத் தவிர. அதிகப்படியான வழிபாட்டைப் பொருத்தவரை ஒரு நடுநிலைமையை மேற்கொண்டால் அது நீடித்திருக்கும்; நிலைபெறும்.” சுருக்கமான இந்த பதிலில் மிகவும் ஆழமான கருத்து அமைந்துள்ளது.

உதுமான் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாய் இருந்த காலகட்டம். அனைவருக்கும் வரும் கடைசித் தருணம் ஸல்மான் அல் ஃபாரிஸீயை வந்து சேர்ந்தது. மரணப் படுக்கையில் இருந்தவரைச் சந்திக்க ஸஅத் இப்னு அபீவக்காஸும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதும் வந்தனர். இத்தகு இறுதித் தருணங்களை நெருங்கிய சில தோழர்களின் நிகழ்வுகள் நினைவிருக்கிறதா?

அழுதார் ஸல்மான்!

“அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” விசாரித்தார்கள்.

“மரண பயத்தினாலோ, உலக இச்சையினாலோ நான் அழவில்லை. ‘இவ்வுலகில் உங்கள் ஒவ்வொருவருக்கான உடைமைகள் பயணியைப் போல் அமையட்டும்’ என்று நபியவர்கள் நமக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு அளித்த அந்த உடன்படிக்கையை நாம் நிறைவேற்ற இயலாமற் போனதை நினைத்து அழுகின்றேன்.”

சுற்றுமுற்றும் பார்த்தார்கள் ஸஅதும் அப்துல்லாஹ்வும். உணவருந்த ஒரு பாத்திரம், நீரருந்த, கழுவ ஒரு பாத்திரம். இவைதான் அங்கிருந்தன. ஒரு பயணிக்கு இதுவே மிக அதிகம் என்று நினைத்து அழுது கொண்டிருந்தார் ஸல்மான். நம்மைச் சுற்றி ஒருமுறை பார்த்தால் எத்தனை சொகுசுகள்; தன்னிறைவுக்கும் அதிகமான வசதிகள். அடங்குகிறதா மனது? அழவில்லை என்றாலும் போகட்டும்; மற்றவர்களையும் பார்த்து ஏங்கி ஏங்கியல்லவா மாய்கிறது!

“எங்களுக்கு அறிவுரை பகருங்கள்” என்று வேண்டினார் ஸஅத்.

“ஸஅதே! பங்கிட்டு அளிப்பதிலும் மக்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.” மீண்டும் சுருக்கமான, ஆழமான பதில்.

அவரது இறுதி நாள் வந்தது. தம் மனைவியை அழைத்தார் ஸல்மான். அவர் படுத்திருந்த அறையில் நான்கு கதவுகள் இருந்தன. மனைவியிடம், “அனைத்துக் கதவுகளையும் திறந்து வை. நான் இன்று சில விருந்தினர்களை எதிர்பார்க்கிறேன். அவர்கள் எந்த வாசல் வழியாய் நுழைவார்கள் என்று தெரியவில்லை.”

அவரது அறைக் கதவுகளை அகலத் திறந்து வைத்தார் மனைவி. அடுத்து, தாம் பத்திரப்படுத்தி வைத்திருந்த நறுமண கஸ்தூரியை எடுத்து வரச்சொன்னார். ”இதைத் தண்ணீரில் கலந்து எனது படுக்கையைச் சுற்றித் தடவி வை.”

செய்தார் மனைவி. சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்து பார்த்தபோது உறங்குவதைப் போல் கிடந்தார் ஸல்மான் அல் பாரிஸீ. தளை உடைத்து பாரசீகத்தில் துவங்கிய அவரது வாழ்க்கை முற்றுப் பெற்றிருந்தது.

ரலியல்லாஹு அன்ஹு!
oOo


No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்