Social Icons

Monday 29 October 2012

மத்ஹபையாவது பின்பற்றுவார்களா? பள்ளியில் இரண்டாவது ஜமாஅத்

பள்ளிவாசல்கள் கட்டப்படுவதன் நோக்கமே மக்கள் அங்கு ஒன்று கூடி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது தான். ஆனால் இன்றைக்கு சுன்னத் ஜமாஅத்தினர் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் தங்களுடைய நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளிவாசல்களில், தாமதமாக வருபவர்களை ஜமாஅத்தாகத் தொழுவதற்குத் தடை விதிக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இரண்டாவது ஜமாஅத் நிறைவேற்றுவது கூடாது என போர்டுகளையும் தொங்க விட்டுள்ளனர். ஜமாஅத்தாகத் தொழுகை நடத்திய பல தவ்ஹீத்வாதிகள் பல ஊர்களில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். 

சுன்னத் ஜமாஅத் என்றால் நபிவழியைப் பின்பற்றும் ஜமாஅத் என்று பொருளாகும். ஆனால் உண்மையில் இவர்களுக்கும் இந்தப் பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஏனெனில் நபி வழியில் ஒரு தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் தொழுகை நடத்துவது கூடாது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்பது மட்டுமல்ல, இரண்டாவது ஜமாஅத் நடத்துவதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியும் உள்ளார்கள்.

தொழுகைகளை இமாம் ஜமாஅத்தோடு முதல் நேரத்தில் நிறைவேற்றுவது தான் மிகவும் சிறந்ததாகும். ஆனால் அதே நேரத்தில் பணிச் சுமைகளின் காரணமாகவோ, தூக்க மிகுதியாலோ, பயணத்தின் காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தினாலோ முதல் ஜமாஅத்திற்குத் தாமதமாகி விட்டவர்கள் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தடுப்பதற்கு எந்த ஒரு சான்றும் கிடையாது. 

மேலும் ஜமாஅத்தாகத் தான் தொழுவது தான் தனியாகத் தொழுவதை விட மிகச் சிறந்ததாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி ) நூல்: முஸ்லிம் (1147)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் (1151)


மேற்கண்ட ஹதீஸ்கள் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்புகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும் ஜமாஅத்தாகத் தான் தொழ வேண்டும் எனபதை வலியுறுத்துகின்றன. பள்ளியில் முதலில் தொழுகின்ற ஜமாஅத்தை மட்டும் தான் இவை குறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.


கொஞ்சம் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்தால் ஒருவன் பள்ளிக்கு வருவதே அங்கு வருபவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். தனியாகத் தொழுவதென்றால் வீடுகளிலோ, கடைகளிலோ தொழுது கொள்ளலாம். ஏனென்றால் பூமி முழுவதும் தொழுமிடமாகும். பள்ளிவாசல் கட்டப்படுவதன் நோக்கமே அங்கு தொழப்படும் தொழுகைகள் ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான்.


இதன் காரணமாகத் தான் ஜமாஅத்தாகத் தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள்.


ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி (647)


பள்ளிவாசலில் தொழுவது என்றாலே ஜமாஅத்தாகத் தொழுவது தான் என்பதாலேயே நபியவர்கள் வீட்டில், கடையில் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள்.


எனவே நபியவர்கள் என்ன நோக்கத்திற்காகப் பள்ளிவாசலில் தொழுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்களோ அந்நோக்கத்தைப் பாழ்படுத்தும் வண்ணம் இன்றைய சுன்னத் ஜமாஅத்தினர், பள்ளியில் தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தடை செய்து, தங்கள் முதுகுகளில் பாவச் சுமைகளைச் சுமந்து கொள்கிறார்கள்.


மேலும் நபியவர்கள், முதல் ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தாமதமாக வந்த ஒருவரை பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழ வைத்து நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) நன்மையைப் பெறுபவர் யார்? என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்.அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)  நூற்கள்: திர்மிதி (204), அபூதாவூத் (487)


எனவே ஒரு பள்ளியில் எத்தனை தடவை ஜமாஅத்தாகத் தொழுதாலும் அதில் தவறில்லை என்பதை நாம் நபி வழி ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாக விளங்கிக் கொண்டோம். இறை நம்பிக்கையாளர்களுக்கு இதுவே போதுமான சான்றாகும். இங்கு மற்றொன்றையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும். பள்ளியில் நடைபெறுகின்ற அதிகமான மக்கள் பங்குபெறுகின்ற முதல் ஜமாஅத்தில் கலந்து கொள்வது தான் மிகவும் சிறப்பிற்குரியதும் நபியவர்களால் பல ஹதீஸ்களில் வலியுறுத்தப்பட்டதுமாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.


எனினும், பள்ளிக்குத் தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவது சிறந்ததாகும்; நபியவர்கள் காட்டிய நடைமுறையாகும். நபியவர்களின் தோழர்களான அருமை ஸஹாபாக்களும் இதனை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளனர். (நபிவழியின் அடிப்படையில் உள்ளதற்குத் துணைச் சான்றாக

நாம் ஸஹாபாக்களின் நடைமுறையை ஆதாரமாகக் காட்டுகின்றோமே தவிர ஸஹாபாக்களின் நடைமுறை இறைச் செய்திக்கு நிகரானது என்ற கருத்தில் அல்ல.)

அனஸ் (ரலி) ஒரு பள்ளிவாசலுக்கு வந்த போது அங்கே தொழுகை முடிந்து விட்டது. உடனே பாங்கும் இகாமத்தும் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள். நூல்: புகாரி, பாகம்: 1, பக்கம்: 505 இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒரு பள்ளியில் நுழைந்தார்கள். அப்போது அந்தப் பள்ளியில்உள்ளவர்கள் தொழுது முடித்திருந்தார்கள். எனவே அல்கமா, அஸ்வத், மஸ்ரூக் ஆகியோருடன் ஜமாஅத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: ஸலமா இப்னு குகைல் நூல்: அல்அவ்ஸத் - இப்னி முன்திர், பாகம்: 6, பக்கம்: 318


நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த தலைமுறையினரில் அநேக அறிஞர்களின் கூற்றும் இதுவே. ஜமாஅத் தொழுகை நடந்து முடிந்து பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதில் தவறில்லை என்று கூறுகின்றனர். இமாம் அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர்.


(நூல்: திர்மிதி) மேலும் இரண்டாவது ஜமாஅத்தைத் தடை செய்பவர்கள் எந்த மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுகிறார்களோ அந்த மத்ஹபுகளில் கூட இரண்டாவது ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. உண்மையில், நாங்கள் மத்ஹபைப் பின்பற்றுகிறோம் என்று இவர்கள் கூறுவது வெறும் வாய் வார்த்தைகளேயன்றி வேறில்லை. இதோ அவர்களுடைய மத்ஹபுகளில் கூறப்பட்டுள்ள ஆதாரங்களைக் காண்போம்.


இமாம் ஷாஃபி அவர்களின் கருத்து இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் பள்ளியில் உள்ளஅனைத்து மக்களுமே சமமானவர்கள் தான். (பள்ளிவாசல் என்பதே) ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவதற்காகத் தான். இதுதான் வீதிகளின் ஓரங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்குரிய சட்டமுமாகும். அங்கு மீண்டும் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத் பாகம்: 1, பக்கம்: 39


ஹனஃபி மத்ஹப் அறிஞர்களின் கருத்து


இமாம் அபூ யூசுப் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது:  இமாமிற்கென்று வரையறுக்கப்பட்ட இடமல்லாத ஒரு மூலையில் ஜமாஅத் தவறிய மூன்று பேர்களோ அல்லது நான்கு பேர்களோ நின்று பாங்கு சொல்லித் தொழுதால் எந்தத் தவறுமில்லை. இது அழகானதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது: ஒரு கிராமவாசி பள்ளியில் நுழைந்து தொழுவதற்கு நின்ற போது நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் இவருக்கு தர்மம் செய்ய மாட்டாரா? (அவ்வாறு தர்மம் செய்பவர்) எழுந்து இவரோடு தொழட்டும் என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்து அவரோடு தொழுதார்கள். ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத், பாகம்: 1, பக்கம்: 399


மௌலானா முல்லா அலீ காரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்: இவருடைய கருத்தாகிறது, ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது குற்றமாகாது என்பதன் மீது அமைக்கப்பட்டதாகும். ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் ரத்துல் முஹ்தார் பாகம்: 3, பக்கம்: 166


ஹன்பலி மத்ஹப் அறிஞர்களின் கருத்து


ஒரு பகுதியில் இமாம் தொழுகை நடத்தி முடித்த பிறகு வேறொரு ஜமாஅத்தினர் அங்கு வந்தால் அவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவது விரும்பத் தக்கதாகும். இதுதான் இப்னு மஸ்வூத்(ரலி), அதாவு, ஹஸன், மற்றும் இப்ராஹிம் நகயீ, இஸ்ஹாக் ஆகியோருடைய கருத்துமாகும். ஆதாரம்: ஹன்பலி மத்ஹப் நூல் அஷ்ஷரஹுல் கபீர் லிஇப்னி குதாமா பாகம்: 2, பக்கம்: 7


மேலும் ஹன்பலி மத்ஹப் அறிஞர்கள் இதற்குச் சான்றாக நபியவர்களின் ஹதீஸ்களை முன்வைக்கிறார்கள். இதோ அஷ்ஷரஹுல் கபீர் என்ற நூலாசிரியர் கூறுவதைப் பாருங்கள்.


ஜமாஅத் தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு நம்முடைய ஆதாரமாகிறது தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று வரக் கூடிய நபியவர்களின் பொதுவான கட்டளையாகும். மேலும் அபூ ஸயீதுல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். உங்களில் யாராவது ஒருவர் இவரோடு தொழுது இவருக்கு தர்மம் செய்ய மாட்டாரா? என்று நபியவர்கள் கேட்டார்கள். ஒரு மனிதர் எழுந்து அவருடன் சேர்ந்து தொழுதார் என்ற ஹதீஸும் நமக்குரிய ஆதாரமாகும். இதே ஹதீஸிற்குரிய அறிவிப்பாளர் வரிசையில் அபூ உமாமா (ரலி) அவர்கள் வாயிலாகப் பின்வரும் அதிகப்படியான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் தொழுது முடித்த போது நபியவர்கள் இந்த இருவரும் ஜமாஅத் ஆகும் என்று கூறினார்கள். ஆதாரம்: அஷ்ஷரஹுல் கபீர், பாகம்: 2 பக்கம்: 7


நபிவழியிலும் நபித்தோழர்கள் நடைமுறைகளிலும் மத்ஹபுகளிலும் அனுமதிக்கப்பட்ட ஒன்றை மறுப்பவர்கள், தடுப்பவர்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.

அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்