Social Icons

Monday 1 October 2012

மரணம் நெருங்கி விட்டால்...



தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந்து கொள்ள முடியாது.
இவருக்கு இப்போது மரணம் வராது என்று கருதும் அளவுக்கு இளமையாகவும், உடல் நலத்துடனும் கவலை ஏதுமின்றி காணப்படும் எத்தனையோ பேர் யாரும் எதிர்பாராத வகையிலும், விபத்துக்களிலும் திடீரென்று மரணித்து விடுகின்றனர். இத்தகையோர் மிகவும் அரிதாகவே உள்ளனர்.

பெரும்பாலானவர்கள் இவ்வுலகில் அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவித்து படிப்படியாகத் தளர்ச்சி அடைந்து மரணிக்கின்றனர். தமக்கு மரணம் விரைவில் வந்து விடும் என்பதை இவர்கள் அன்றாடம் உணரக் கூடிய வாய்ப்பைப் பெறுகின்றனர்.

திடீரென மரணிப்பவர்களுக்குக் கிடைக்காத நல்ல வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கின்றது. மரணம் நெருங்கி விட்டதை இவர்கள் உணர்வதால் கடந்த காலங்களில் செய்யத் தவறிய காரியங்களைச் செய்து முடிக்கவும், கடந்த காலத் தவறுகளைச் சரி செய்யவும் இவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

மரணத்தை இறைவனிடம் வேண்டுதல்
 மரணத்தின் அறிகுறிகளைக் காணும் சிலர் சீக்கிரம் நாம் மரணித்து விட்டால் நல்லது என்று சில வேளை நினைப்பார்கள்.
முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ
வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு! என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள்.

எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க
ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 5671, 6351
இதற்கான காரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435
எனவே நோய் நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், உடல் உபாதை மற்றும் மன உளைச்சலின் காரணமாக நாம் மரணத்திற்கு ஆசைப்படக் கூடாது. மறுமையில் நமக்குக் கிடைக்கவுள்ள தண்டனையைக் குறைக்க இறைவன் நமக்குத் தந்துள்ள பரிகாரம் என்று துன்பங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

துன்பத்தை வேண்டக் கூடாது
இறைவன் நமக்கு அளிக்கும் துன்பங்களை நாம் ஏற்றுச் சகித்துக் கொள்ள வேண்டும் என்றாலும் இதை இறைவனிடம் ஒரு கோரிக்கையாக நாம் முன் வைக்கக் கூடாது. இறைவா! மறுமையில் எனக்குத் தரவுள்ள துன்பத்தை இங்கேயே தந்து விடு என்று பிரார்த்திக்கக் கூடாது.

பறவைக் குஞ்சு போல் மெலிந்து போன ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றார்கள். நீ ஏதாவது பிரார்த்தனை செய்து வந்தாயா? என்று அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம்! இறைவா, மறுமையில் நீ எனக்கு என்ன தண்டனை கொடுக்க உள்ளாயோ அதை இவ்வுலகிலேயே எனக்கு முன்கூட்டியே வழங்கி விடு என்று பிரார்த்தித்து வந்தேன் என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்! இதை நீ தாங்க மாட்டாய் என்று கூறிவிட்டு இறைவா இவ்வுலகிலும் எனக்கு நல்லதைத் தா! மறுமையிலும் நல்லதைத் தா! மேலும் நரகத்தின் வேதனையிலிருந்து என்னைக் காப்பாற்று எனக் கூறியிருக்க மாட்டாயா?என்று அறிவுரை கூறினார்கள். அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அவரைக் குணப்படுத்தினான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: முஸ்லிம் 4853
இவ்வுலகிலும் என்னைத் தண்டித்து விடாதே! மறுமையிலும் என்னைத் தண்டித்து விடாதே என்று தான் நமது கோரிக்கை அமைய வேண்டும். இறைவன் நாடினால் இவ்வுலகிலும், மறுமையிலும் நம்மைத் தண்டிக்காமல் இருக்கும் அளவுக்கு அவன் கருணை மிக்கவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மீறப்பட்ட மனித உரிமைகளுக்காகப் பரிகாரம் தேடுதல்
எந்த மனிதராக இருந்தாலும் அவரால் மற்றவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். உடல், பொருளாதாரம் மற்றும் மன ரீதியாக நம்மால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டும். மனிதர்களுக்கு அநீதி இழைத்த நிலையில் நாம் மரணித்தால் மறுமையில் மாபெரும் நட்டத்தை நாம் சந்திக்க நேரும்.
மற்றவரின் மானம், அல்லது வேறு பொருள் சம்பந்தமாக ஒருவர் ஏதேனும் அநீதி இழைத்திருந்தால் தங்கக் காசுகளும், வெள்ளிக் காசுகளும் செல்லாத நாள் வருவதற்கு முன் இன்றே அவரிடம் பரிகாரம் தேடிக் கொள்ளவும். இவரிடம் நல்லறங்கள் இருந்தால் இவர் செய்த அநியாயத்தின் அளவுக்கு இவரிடமிருந்து நல்லறம் பிடுங்கப்படும். இவரிடம் நன்மைகள் இல்லாவிட்டால் இவரால் பாதிக்கப்பட்டவரின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர் மீது சுமத்தப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 2449, 6534
இல்லாதவர் யார் தெரியுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் யாரிடம் காசுகளும், தளவாடங்களும் இல்லையோ அவர் தான் இல்லாதவர் என்று விடையளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் ஒருவர் வருவார். அதே சமயம் இவனைத் திட்டியிருப்பார்; அவன் மீது அவதூறு கூறியிருப்பார்; இவனது சொத்தைச் சாப்பிட்டிருப்பார்; அவனது இரத்தத்தை ஓட்டியிருப்பார்; இவனை அடித்திருப்பார். இவர் செய்த நன்மைகள் இவனுக்கும் அவனுக்குமாக வழங்கப்படும். கணக்குத் தீர்வதற்கு முன் இவரது நன்மைகள் முடிந்து விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர் மீது போடப்படும். பின்னர் இவர் நரகில் வீசப்படுவார். இவர் தான் மறுமை நாளில் இல்லாதவர் என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி  நூல்: முஸ்லிம் 4678

வஸிய்யத்தைப் பதிவு செய்தல்
ஒரு மனிதர் மரணித்து விட்டால் அவரது சொத்துக்களை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பதற்கு இஸ்லாத்தில் தெளிவான சட்டம் உள்ளது. எனவே தனது சொத்துக்களை வாரிசுகள் இவ்வாறு பிரித்துக் கொள்ள வேண்டும் என்று வஸிய்யத் - மரண சாசனம் - செய்யும் உரிமை யாருக்கும் இல்லை.
ஆயினும் ஒருவரது சொத்தில் அவரது சொந்த பந்தங்கள் அனைவருக்கும் பங்கு கிடைக்காது.

கணவன், மனைவி, தாய், தந்தை, மகன், மகள் ஆகிய உறவுகளுக்குத் தான் சொத்துரிமை கிடைக்கும். தந்தை மகன் போன்ற உறவுகள் இல்லாத போது தான் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும். சகோதர சகோதரிகளும் இல்லாத போது தான் தந்தையின் சகோதரரர்களுக்குக் கிடைக்கும்.

எனவே தனது உறவினர்களில் சொத்துரிமை கிடைக்காத உறவினர்களுக்குத் தனது சொத்தில் ஏதாவது கிடைக்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப்படலாம்.

அது போல் பள்ளிவாசல் போன்ற அறப்பணிகளுக்காக தனது சொத்தில் ஏதாவது அளிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பலாம்.

அவ்வாறு விரும்புவோர் என் மரணத்திற்குப் பின் இந்த நபருக்கு இவ்வளவு கொடுங்கள்! அந்த நற்பணிக்கு இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்று எழுதி வைப்பது அவசியமாகும்.

எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் வஸிய்யத் செய்யத் தக்கது அவரிடம் இருந்தால் அதை எழுதிக் கொள்ளாமல் இரண்டு இரவுகள் கழியலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்கள்: புகாரி 2738, முஸ்லிம் 3074, 3075
வழங்க வேண்டும் என்று எப்போது நாம் தீர்மானம் செய்கிறோமோ அதை உடன் எழுதிப் பதிவு செய்து விட வேண்டும். ஏனெனில் எந்த நேரத்தில் நமக்கு மரணம் வரும் என்பதை நம்மால் கணிக்க இயலாது.

மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் வஸிய்யத் செய்தல்
வாரிசுகளை அறவே அலட்சியம் செய்துவிட்டு அனைத்து சொத்துக்களையோ அல்லது பெரும் பகுதி சொத்துக்களையோ எந்த மனிதருக்காகவும், எந்த நற்பணிக்காகவும் எழுதி வைக்க அனுமதியில்லை. அவ்வாறு எழுதினால் சட்டப்படி அது செல்லத் தக்கதல்ல. ஒரு மனிதர் அதிகப் பட்சமாக தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கு, அல்லது அதை விடக் குறைவாகவே வஸிய்யத் - மரண சாசனம் - செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒருவரது சொத்தின் மதிப்பு மூன்று லட்சம் என்றால் அவர் ஒரு லட்சம் அல்லது அதற்குக் குறைவான தொகைக்கு மட்டுமே வஸிய்யத் செய்ய உரிமை உண்டு. ஒருவர் அறியாமை காரணமாக அனைத்தையும் வஸிய்யத் செய்தால் மூன்றில் ஒரு பங்கு என்றே மார்க்கத்தில் அதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்போது என்னை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் எனக்குக் கடுமையான வேதனை ஏற்பட்டுள்ளது. நானோ செல்வம் உடையவனாக இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு மகள் தான் இருக்கிறார். எனவே எனது சொத்துக்களில் மூன்றில் இரண்டு பங்குகளைத் தர்மம் செய்யட்டுமா? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அப்படியானால் பாதி(யை தர்மம் செய்யட்டுமா?) என்று கேட்டேன். அதற்கும் கூடாது என்றனர். பின்னர் மூன்றில் ஒரு பங்கு தர்மம் செய். அது கூட அதிகம் தான். உனது வாரிசுகளைப் பிறரிடம் கையேந்தும் நிலையில் விட்டுச் செல்வதை விட அவர்களைத் தன்னிறைவு பெற்ற நிலையில் விட்டுச் செல்வது சிறந்தது என்று அறிவுரை கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி)  நூல்: புகாரி 1296, 3936

வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்தல்
ஒருவர் தனது சொத்தில் மகன், மகள், தாய், தந்தை, கணவன், மனைவி உள்ளிட்ட வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்ய அனுமதியில்லை. ஏனெனில் அந்தப் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு நமக்குச் சட்டத்தை வழங்கி விட்டான்.
(
வாரிசு) உரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையை அல்லாஹ் வழங்கி விட்டான். எனவே வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்யலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 2047, நஸயீ 3581, 3582, 3583, இப்னு மாஜா 2703, அஹ்மத் 17003, 17007, 17387, 17393
உறவினர்கள் ஏகத்துவக் கொள்கையைப் பேண வஸிய்யத் செய்தல்
மரணம் நெருங்கி விட்டதாக உணர்பவர் தமது குடும்பத்தார் ஏகத்துவக் கொள்கையைக் கடைசி வரை கைக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்..
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்? என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் என்றே (பிள்ளைகள்) கூறினர்.  திருக்குர்ஆன் 2:133
நிலைத்து நிற்கும் தர்மம் செய்தல்
மனிதன் மரணித்து விட்டால் அவனால் எந்த நன்மையும் செய்ய முடியாது என்பதை அனைவரும் அறிவோம்.
ஆயினும் நிலைத்து நிற்கும் வகையில் நாம் ஒரு நல்லறத்தைச் செய்துவிட்டு மரணித்தால் அந்த நல்லறத்தின் மூலம் மக்கள் பயனடையும் காலம் வரை நமக்கு நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டிருக்கும்.
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி நூல்: முஸ்லிம் 3084
இவ்வுலகில் வாழும் போது நாம் ஒரு பள்ளிவாசல் கட்டிவிட்டு மரணித்தால் அதில் மக்கள் தொழுகை நடத்தும் காலமெல்லாம் நமக்கு நன்மைகள் வந்து சேரும்.
நாம் ஒரு கிணறு தோண்டி விட்டு மரணித்தால் அக்கிணற்றில் மக்கள் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தும் போதெல்லாம் நமக்கு நன்மை வந்து சேரும்.
எந்த ஒரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டு, அம்மரத்திலிருந்து மனிதர்களோ, மற்ற விலங்கினங்களோ சாப்பிட்டால் அது அவர் செய்யும் தர்மமாகக் கருதப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)  நூல்கள்: புகாரி 6012, 2320, முஸ்லிம் 2904
ஒவ்வொருவரும் இதில் அதிகக் கவனம் செலுத்தி நன்மைகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக மரணத்தை நெருங்கியவர் இதில் சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும்.
குர்ஆன் வசனங்களை ஓதி இறை உதவி தேடுதல்
படுக்கையில் கிடக்கும் நிலையை அடைந்தவர்கள் (குல் ஹுவல்லாஹு அஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின்னாஸ் ஆகிய) திருக்குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை ஓதி, ஊதிக் கொள்ள வேண்டும். இதை ஓத முடியாத அளவுக்கு வேதனை அதிகமாக இருந்தால் அவரது குடும்பத்தினர் அவருக்காக அதை ஓதி கைகளில் ஊதி அதன் மூலம் அவரது உடலில் தடவ வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும் போது (முஅவ்விதாத் எனப்படும்) கடைசி மூன்று அத்தியாயங்களை ஓதி தமது கையால் தடவிக் கொள்வது வழக்கம். அவர்கள் எந்த நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது கடைசி மூன்று அத்தியாயங்களை நான் ஓதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தடவி விடுவேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 4439, 5735
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்படும் போது தமக்காக கடைசி மூன்று அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். அவர்களின் வேதனை கடுமையான போது அவர்களுக்காக நான் ஓதி அவர்களின் கைகளுக்குரிய பரகத்துக்காக அவர்கள் கையால் தடவி விட்டேன்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 5016

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்